மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் படுதோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் 2020 ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 11 போட்டியில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, அதில் ஒன்பது போட்டிகளில் தோல்வியை தழுவி மோசமான ரெக்கார்டை வைத்திருக்கின்றது.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு 15 வயது வீரரான வைபவ் சூரியவன்சி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்த நிலையில் வைபவ் சூர்யவன்சிக்கு 15 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, எனக்கு அணியில் என்ன நடக்கிறது என்பதெல்லாம் தெரியாது.

என்னுடைய பிறந்தநாளுக்காக இர்வு 12 மணிக்கு கேக் வெட்டலாம் என்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் எனக்கு முன்பே தூக்கம் வந்துவிட்டது. என் முகத்தில் கேக்கை அடிப்பார்கள் என பயந்து நான் முன்பே தூங்கி விட்டேன். இன்றைய ஆட்டத்தில் என்னுடைய திட்டமே பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி நல்ல அடித்தளம் அமைத்து விளையாடுவது தான்.

ஆரம்ப கட்டத்தில் ஆடுகளம் கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன், அது பேட்டிற்கு நன்றாக வந்தது. நான் எப்போதுமே பந்தை தற்காத்து விளையாடுவது குறித்து யோசிக்க மாட்டேன். பவர் பிளேவில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தை எங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய திட்டமாக இருந்தது.
பவர்பிளே என்பது மிகவும் முக்கியம். பவர் பிளேவில் பந்து வீசும் அணி சிறப்பாக செயல்பட்டால் அந்தப் போட்டி அவர்களுக்கு சாதகமாக மாறிவிடும். இதை தான் நாங்கள் பவர் பிளேவில் செய்தோம். உனக்கு எதிராக எதிரணி பவுலர்கள், எந்த திட்டத்தை வேண்டுமானாலும் தீட்டிக்கொள்ளட்டும். நீ உன்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடு என்று பயிற்சியாளர் சொன்னார்.

அதை மனதில் வைத்துக்கொண்டு நான் அதிரடி காட்டினேன். என்னுடைய இயல்பான ஆட்டத்தை விளையாடினேன். அது மட்டுமல்லாமல் என்னுடைய தொடக்க ஜோடியான ஜெய்ஸ்வால் எப்படி விளையாட வேண்டும். எப்படி மாற்றத்தை கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து எனக்கு அடிக்கடி சொல்வார். அது மட்டுமில்லாமல் அவர் எனக்கு உற்சாகத்தையும் கொடுப்பார். இது எனக்கு உதவியாக இருந்தது என்று வைபவ் சூர்யவன்சி தெரிவித்துள்ளார்.