IPL 2026: நான் வெறும் இம்பாக்ட் பிளேயரா? வைபவ் சூர்யவன்ஷி அதிருப்தி. ராஜஸ்தான் பயிற்சியாளர் விளக்கம்
ஹைதராபாத்: 2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார். எனினும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து 'இம்பாக்ட் பிளேயராக' பயன்படுத்துவது அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வாரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியிலும், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் சூர்யவன்ஷி பேட்டிங்கின் போது மட்டுமே களமிறக்கப்பட்டார். ராஜஸ்தான் அணி பந்துவீசும் போது அவர் மைதானத்தில் இருப்பதில்லை. இது குறித்து அந்த அணியின் உதவி பயிற்சியாளர் ட்ரெவர் பென்னி கூறுகையில், "சூர்யவன்ஷிக்கு பீல்டிங் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். தான் ஒரு சிறந்த பீல்டர் என்பதால் 20 ஓவர்களும் மைதானத்தில் இருந்து அணிக்கு உதவவே அவர் விரும்புகிறார். தான் ஒரு இம்பாக்ட் பிளேயராகச் செயல்படுவதில் அவருக்குச் சிறிய அதிருப்தி உள்ளது" எனத் தெரிவித்தார்.

மேலும் இந்த முடிவுக்கான காரணத்தை விளக்கிய பென்னி, "சூர்யவன்ஷி மோசமான பீல்டர் என்பதால் இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை. தென்னாப்பிரிக்க வீரர் டோனோவன் ஃபெரைரா காயத்திலிருந்து மீண்டு வந்துள்ளார். அவர் ஒரு மிகச்சிறந்த பீல்டர் என்பதால், அவரைப் பந்துவீச்சின் போது பயன்படுத்த வேண்டியுள்ளது. இதனால் சூர்யவன்ஷியை பேட்டிங்கிற்கு மட்டும் பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது" என்றார்.
இந்த சீசனில் பும்ரா, ஹேசில்வுட் போன்ற முன்னணி பந்துவீச்சாளர்களைச் சிதறடித்த சூர்யவன்ஷி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு எதிராக வெறும் 15 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். பெங்களூருவுக்கு எதிராக 26 பந்துகளில் 78 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றினார்.
ஆனால், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சூர்யவன்ஷிக்கு அதிர்ஷ்டம் இல்லை. பிரஃபுல் ஹிங்கே வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து 'கோல்டன் டக்' முறையில் அவர் வெளியேறினார். சூர்யவன்ஷியின் இந்தத் தோல்வி, இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் தோல்விக்கும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த ஆண்டு குஜராத் அணிக்கு எதிராக வெறும் 35 பந்துகளில் சதம் விளாசி அதிவேக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications