IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்
மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதில் ஒரு சிறுவன் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிப்பார் என்று யாராவது கற்பனை செய்திருக்க முடியுமா? ஆனால், 2026 ஐபிஎல் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் புயல் அதனை நிஜமாக்கி காட்டியுள்ளது. அவரது அசுர வேக ஆட்டத்தைப் பார்த்து வியந்து போன இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், வைபவ் குறித்து ஒரு சுவாரசியமான கணிப்பை வெளியிட்டுள்ளார். அது இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஐபிஎல் வரலாற்றிலேயே 3 அதிவேக சதங்களில் 2 சதங்கள் இந்த 15 வயது சிறுவனுடையது என்பதுதான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 35 மற்றும் 36 பந்துகளில் சதம் விளாசி, கிறிஸ் கெயிலின் சாதனையை வைபவ் நெருங்கி வருகிறார். இது குறித்து 'ஸ்டிக் டூ கிரிக்கெட்' என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் வாகன், "இந்தச் சிறுவன் ஏற்கனவே 35, 36 பந்துகளில் சதம் அடித்து அசுர வேகத்தில் முன்னேறி வருகிறான். 2024 ஆம் ஆண்டில் அபிஷேக் சர்மா 42 சிக்ஸர்கள் அடித்ததே ஒரு இந்திய வீரரின் சாதனையாக உள்ளது. ஆனால் வைபவ் இப்போதே 37 சிக்ஸர்களை விளாசிவிட்டார். தற்போது உலகிலேயே மிகச்சிறந்த சிக்ஸர் ஹிட்டர் இவர்தான்" என்று புகழாரம் சூட்டினார்.

அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் வீரர் ஃபில் டப்னெல், "இப்போதே இவ்வளவு வேகம் காட்டினால், 21 வயதிற்குள் அவர் சோர்வடைந்து (Burnt out) விடுவார்" என்று கிண்டலாகக் கூறினார். அதற்குப் பதிலளித்த மைக்கேல் வாகன், "21 வயதிற்குள் இவரிடம் ஓய்வு காலத்திற்குத் தேவையான அளவு கோடிக்கணக்கான பணம் சேர்ந்துவிடும். அதனால் அவர் 21 வயதிலேயே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார்" என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார். உடனே குறுக்கிட்ட இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டைர் குக், "அவர் ஒரு போட்டியில் வெறும் 30 பந்துகளைத் தான் விளையாடுகிறார், அதனால் அவர் சோர்வடைய வாய்ப்பே இல்லை" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.
விளையாட்டாகப் பேசினாலும், வைபவ் சூர்யவன்ஷியின் வளர்ச்சி இந்தியத் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது. அடுத்த மாதம் அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் வைபவ் இடம் பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் இயன் பிஷப், அயர்லாந்து தொடருக்கான தனது இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷியைத் தொடக்க வீரராகத் தேர்வு செய்துள்ளார். 15 வயதில் ஒரு சர்வதேசத் தொடருக்கு ஒரு வீரரின் பெயர் அடிபடுவது இந்திய கிரிக்கெட்டில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications