"நான் எந்த தப்பும் செய்யலை”.. வருண் சக்கரவர்த்தி ஆவேசம்.. மோசமான பவுலிங் குறித்த கேள்விக்கு பதிலடி
கொல்கத்தா: "எனது பந்துவீச்சில் எந்தத் தவறும் இல்லை, ஆடுகளங்கள் தான் சரியில்லை" என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விமர்சனங்களுக்கு ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக விக்கெட் எடுக்கத் திணறிய அவர், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தனது ஆட்டத்திறன் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பின்னணியில் இருக்கும் ரகசியங்களை உடைத்துள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி வெறும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகனாக ஜொலித்தார். ஆனால், இந்தப் போட்டிக்கு முன்பு வரை வருண் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வந்தார்.

மிரட்டிய வருண்
ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டிக்கு முன்னதாக 4 போட்டிகளில் விளையாடியிருந்த வருண், வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார். அவரது பந்துவீச்சு சராசரி 69.5 ஆகவும், எகானமி 10.69 ஆகவும் மிகவும் மோசமாக இருந்தது. 2026 டி20 உலகக்கோப்பையிலும் அவரது ஆட்டம் தொடக்கத்தில் நன்றாக இருந்தாலும், கடைசி 4 போட்டிகளில் ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினார். இதனால் அவர் தனது 'மிஸ்டரி' பந்துவீச்சை இழந்துவிட்டதாகப் பேச்சுக்கள் எழுந்தன.
பிட்ச் தான் வில்லன்
தன்னைப் பற்றிய விமர்சனங்களுக்குப் பதிலளித்த வருண், "இன்று 3 விக்கெட் எடுத்ததற்காக நான் பெரிய வாக்குமூலம் எதையும் கொடுக்க விரும்பவில்லை. இது கிரிக்கெட்டின் இயல்பு. அடுத்த போட்டியில் ஆடுகளம் பந்துவீச்சிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் எல்லா சுழற்பந்து வீச்சாளர்களும் ரன்களை வாரிக் கொடுப்பார்கள். ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்குச் சாதகமாக இருந்தன. 190 ரன்களுக்கு மேல் குவிக்கும் ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களால் எதுவும் செய்ய முடியாது" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "நான் என் மீது எப்போதுமே கடுமையான விமர்சனங்களை முன்வைப்பவன். நான் பந்துவீச்சில் தவறு செய்திருந்தால் அதை நானே பகுப்பாய்வு செய்து கண்டுபிடித்திருப்பேன். ஆனால், கடந்த போட்டிகளில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆடுகளங்களில் பந்து திரும்பாதது தான் ரன்கள் கசியக் காரணம். தற்போது ஆடுகளங்கள் மெதுவாக மாறத் தொடங்கியுள்ளன. இது சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமான விஷயம்" என்றார்.
நானே எனக்கு பெரிய விமர்சகர்
"ஆடுகளம் பந்துவீச்சிற்குச் சாதகமாக இருக்கும்போது நான் எனது பலமான 'ஸ்டம்புகளை குறிவைத்து வீசுவது' என்ற பாணிக்குத் திரும்புவேன். ஆனால் ஆடுகளம் ஒத்துழைக்காத போது சிறந்த பந்துவீச்சாளர்கள் கூட என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவார்கள். இது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களுக்கும் நடக்கும். எனவே, ஒரு நல்ல அல்லது ஒரு மோசமான ஆட்டத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாது" என வருண் சக்கரவர்த்தி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications