IPL 2026: “அவருக்கு ஃபிராக்சர் இருக்கு”.. வருண் சக்ரவர்த்தியை ஆட வைத்த KKR.. பிசிசிஐ கடும் அதிருப்தி
கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, காலில் எலும்பு முறிவு இருந்தும் ஐபிஎல் போட்டியில் விளையாடியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த மாதம் இந்திய அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் அவர் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றது பிசிசிஐ அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மே 16 அன்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி தனக்கு உரிய 4 ஓவர்களையும் வீசினார். ஆனால், அந்தப் போட்டியின் போது அவர் மைதானத்தில் நடக்கக் கூட முடியாமல் நொண்டி நொண்டிச் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. முந்தைய போட்டியில் பீல்டிங் செய்தபோது அவரது இடது காலில் 'ஹேர்லைன் ஃபிராக்சர்' எனப்படும் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் காரணமாகச் சரியாகப் பந்துவீச முடியாமல் திணறிய வருண் சக்ரவர்த்தி, 4 ஓவர்களில் விக்கெட் ஏதும் எடுக்காமல் 47 ரன்களை வாரி வழங்கினார். கொல்கத்தா அணிக்கு இது பிளே ஆப் வாய்ப்பை தக்க வைக்க வேண்டிய வாழ்வா-சாவா ஆட்டமாக இருந்ததால், அவர் வலியையும் மீறி விளையாடியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ஒரு இந்திய வீரர் தனது உடல்நிலையை விட ஐபிஎல் அணிக்கு முக்கியத்துவம் அளிப்பது சரியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ கவலை
இது குறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "வருண் சக்ரவர்த்தி பிசிசிஐ-யுடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரு வீரர். அவரது உடல் தகுதியே எங்களுக்கு முக்கியம். ஜூன் 26-ம் தேதி முதல் இந்திய அணி 7 டி20 போட்டிகளில் விளையாட அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து செல்ல உள்ளது. இப்போது விளையாடி காயத்தை அதிகப்படுத்திக் கொண்டால், அவர் இந்திய அணியில் இடம் பெறுவது கேள்விக்குறியாகும். மே 13 அன்று பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக விளையாடாத வருண், 4 நாட்களில் எப்படி மீண்டும் விளையாட வந்தார் என்பது புரியவில்லை" என்றார்.
கொல்கத்தா அணியின் மருத்துவர்கள் இந்திய அணியின் மருத்துவக் குழுவுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், வருண் சக்ரவர்த்தி மைதானத்தில் பட்ட சிரமம் பிசிசிஐ-யைத் திகைக்க வைத்துள்ளது. ஐபிஎல் அணிகளுக்காக இந்திய வீரர்கள் தங்களது உடல்நிலையைப் பணயம் வைக்கும் போக்கு மீண்டும் ஒரு முறை விவாதத்தைக் கிளப்பியுள்ளது. நாட்டுக்காக விளையாடும்போது ஏற்படும் காயங்களை விட, கிளப் அணிகளுக்காக விளையாடும்போது வீரர்கள் காட்டும் அதீத ஆர்வம் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.


Click it and Unblock the Notifications
