IPL 2026: சுப்மன் கில் அவுட்டானதும், கத்தி கொண்டாடிய விராட் கோலி.. இவ்வளவு ஆக்ரோஷம் தேவையா?
அகமதாபாத்: ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெறும் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து குஜராத் அணி பேட்டிங் செய்த போது ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி, சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, கத்தி கூச்சலிட்டு ஆக்கோரஷமாக நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அகமதாபாத்தில் சுப்மன் கில் பிடித்த சிறப்பான கேட்சுக்குப் பிறகு விராட் கோலி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். கோலி கோபத்தால் கழுத்தில் நரம்புகள் வெளிப்படையாகப் புடைப்பதைக் காண முடிந்தது. நடப்பு சாம்பியன்களான RCB, 155 ரன்களுக்கு சுருண்ட நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான கில்லின் விக்கெட் தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை கோலியின் இந்த ஆக்ரோஷம் எடுத்துக்காட்டியது.

முதலில், கில்லும் சாய் சுதர்சனும் இணைந்து மூன்று ஓவர்களில் 42 ரன்கள் குவித்து, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். கில் ஜோஷ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஒரே ஓவரில் இரண்டு சிக்சர்களையும் மூன்று பவுண்டரிகளையும் விளாசி தனது அதிரடியைக் காட்டினார். இருப்பினும், RCB-யின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் லெங்த் டெலிவரி கில்லை அடிக்க தூண்டியது.
அவர் கவர்ஸ் திசையில் பந்தை அடிக்க முயன்றபோது, விராட் கோலியின் கச்சிதமான கேட்ச் ஒரு பவுண்டரியைத் தடுத்து, கில்லை 43 ரன்களில் வெளியேற்றியது. கில் 43 ரன்களுக்கு வெளியேறியதும், கோலி ஆக்ரோஷமாக தன்னுடைய கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். பந்தை மைதானத்தில் அடித்து, சத்தமாக கத்தி தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்.
சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி கத்திய சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. கோலியை விட ஜூனியர் வீரரான சுப்மன் கில்லை அவுட்டாக்கி விட்டு, கத்தியது தவறு என்று ரசிகர்கள் சாடியுள்ளனர். ரஜத் பட்டிதார் கேட்ச் விவாகரத்தில் தவறான அவுட் வழங்கியதால் கோலி கடுப்பானார். இந்த கோபத்தில் தான் கோலி, கத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
கடந்த சீசனில் கோப்பையை வென்ற அதே அகமதாபாத் மைதானத்திற்கு RCB அணி திரும்பியபோது, ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடியது. கோலி ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கும் மேல் குவித்து, ககிசோ ரபாடாவின் முதல் ஓவரில் 21 ரன்களை விளாசினார், இதில் ஐந்து தொடர்ச்சியான பவுண்டரிகள் அடங்கும். இந்த ஆரம்பத் தாக்குதலுக்குப் பிறகும், கேப்டன் சுப்மன் கில் தனது முதன்மை வேகப்பந்து வீச்சாளரான ரபாடா மீது நம்பிக்கை வைத்தார், அது போட்டியையே மாற்றி அமைத்தது.
ரபாடா (1/38) தனது பலத்தை நிரூபித்து, 13 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த கோலியை வெளியேற்றினார். இந்த முக்கிய விக்கெட் RCB அணியின் சரிவுக்குக் காரணமாக அமைந்தது. அதன் பிறகு, அணி மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷத் கான், 3/22 என்ற சிறப்பான பந்துவீச்சுடன் கீழ் வரிசை பேட்ஸ்மேன்களை வீழ்த்தி, RCB-யின் ஸ்கோரை 155-க்கு கட்டுப்படுத்தினார்.
ஏழு ஓவர்களில் 71/2 என்ற வலுவான நிலையில் இருந்து ஆர்சிபி , 10.3 ஓவர்களில் 96/6 ஆக மாறியது. ராஜத் பட்டிதார் (19), ஜிதேஷ் சர்மா (1), டிம் டேவிட் (9) மற்றும் க்ரூணால் பாண்டியா (4) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்து, அணியின் மொத்த ஸ்கோரை எதிர்பார்த்ததை விடக் குறைவாக்கினர்.


Click it and Unblock the Notifications