IPL 2026: மனைவி அனுஷ்கா உடன் விடிய விடிய விராட் கோலி பார்ட்டி.. "இந்த தருணத்தை பல முறை கனவு கண்டேன்"
அகமதாபாத்: ஐபிஎல் 2026 சீசன் கோப்பையை தொடர்ச்சியாக 2வது முறையாக வென்ற ஆர்சிபி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த முறை நடைபெற்ற துயர சம்பவத்தை கருத்தில் கொண்டு, இம்முறை எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படாது என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதனால் ஆர்சிபி வீரர்கள் அகமதாபாத் ஹோட்டலில் தங்கி வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அனுபவமிக்க வீரர் விராட் கோலி, ஐபிஎல் 2026 இறுதிப் போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடும் அணியின் விருந்தில், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் கோலாகலமாக பங்கேற்றார்.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், 156 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணிக்காக கோலி பேட்டிங்கில் சிறந்து விளங்கினார். 42 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உட்பட 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த அவர், தனது அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐபிஎல் பட்டத்தை வெல்ல உதவினார்.
ஆர்சிபி அணி ஜூன் 1, திங்கள்கிழமை அன்று தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்தது. இந்த வீடியோவில், கோலி அனுஷ்காவுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு, நடனமாடுவதைக் காணலாம். வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அவர் முழுமையாக அனுபவித்தார்.
ஆர்சிபி அணியின் வெற்றியை சிக்சர் அடித்து உறுதி செய்ததுடன், ஆட்ட நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார் கோலி. போட்டி முடிந்த பிறகு பேசிய அவர், வெற்றி பெறும் ரன்னை அடிக்கும் இத்தருணத்தை பலமுறை தன்னுள் கற்பனை செய்ததாகவும் தெரிவித்தார். இலக்கை துரத்தும் போது அணியின் அணுகுமுறை தெளிவாக இருந்ததாகவும், பவர்பிளேயில் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை எடுக்க இலக்கு வைத்ததாகவும் கூறினார்.
"இது நாம் கனவு காணும் ஒரு தருணம். வெற்றியின் ரன்னை அடிக்கும் இந்த தருணத்தை நான் பலமுறை யோசித்துள்ளேன். விளையாட வந்தபோது மிகவும் நிம்மதியாக உணர்ந்தேன். எங்களிடம் உள்ள அணி எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடிய நம்பிக்கையைத் தருகிறது. இலக்கை துரத்துவதற்குக் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி எங்களுக்குத் துல்லியமாகத் தெரியும். எதிரணி யார் என்று நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் மரியாதையானவர்கள், எந்த அணியையும் சீண்ட மாட்டோம். எங்களிடம் திறமையான மற்றும் அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். பெரிய சூழ்நிலைகளில், பெரிய வீரர்கள் களமிறங்கி சாதிக்க வேண்டும்."
"இது ஒரு சேஸ் போட்டி, அவர்கள் என்னை சீக்கிரமாக அவுட் செய்ய முயற்சிப்பார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் 3-4 ஓவர்கள் இருக்கும்போதே அதைத் துரத்தி வெல்லக்கூடிய சாம்பியன் அணி எங்களிடம் உள்ளது என்று எனக்குத் தெரியும். கடந்த ஆண்டு நாங்கள் வென்றபோது, இது பயணத்தின் முடிவு அல்ல, நாங்கள் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்றார். வெங்கியை பவர்பிளேயில் ஆட்டத்தை முடித்துவிட வேண்டும் என்று சொன்னேன். அதில் முழு தெளிவு இருந்தது," என்று மேலும் கூறினார்.
ஐபிஎல் 2026 சீசனின் ஆர்சிபி அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரராக விராட் கோலி திகழ்ந்தார். அவர் 16 போட்டிகளில் 56.25 சராசரியிலும், 165.84 ஸ்டிரைக் ரேட்டிலும் 675 ரன்கள் குவித்தார். இதில் ஐந்து அரை சதங்களும், ஒரு சதமும் அடங்கும்.
37 வயதான விராட் கோலி, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைத் தக்கவைத்துள்ளார். இதுவரை 283 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 40.41 சராசரியிலும், 134.79 ஸ்டிரைக் ரேட்டிலும் 9,336 ரன்கள் குவித்துள்ளார். இதில் 68 அரை சதங்களும், ஒன்பது சதங்களும் அடங்கும்.


Click it and Unblock the Notifications

