பெங்களூர்: சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 2026 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி களமிறங்கியதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
விராட் கோலி, ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட 2008-ஆம் ஆண்டு முதல் தற்போது 2026-ஆம் ஆண்டு வரை நடைபெற்றுள்ள அனைத்து 19 சீசன்களிலும் விளையாடிய உலகின் முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 2008 ஏப்ரல் 18 அன்று இதே சின்னசாமி மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராகத் தனது முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடிய கோலி, இன்று வரை 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆர்சிபி அணிக்காக மட்டுமே விளையாடி வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே அணிக்காக இத்தனை ஆண்டுகள் விளையாடிய ஒரே வீரரும் இவர்தான்.

இதுவரை 267 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 8661 ரன்களுடன் தொடரின் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் உள்ளார். 2016-ஆம் ஆண்டு சீசனில் அவர் குவித்த 973 ரன்கள் என்பது இன்றுவரை ஒரு சீசனில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்களாக உள்ளது. மேலும் 8 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடித்து பல்வேறு சாதனைகளைத் தன்வசம் வைத்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற கோலி, இந்த 19-வது சீசனிலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிராக 1159 ரன்கள் குவித்து ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் மட்டும் 3202 ரன்கள் குவித்து தனது கோட்டையாக இந்த மைதானத்தை மாற்றி வைத்துள்ளார்.

லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாலும், ஐபிஎல் என்று வந்துவிட்டால் ஆர்சிபி ரசிகர்களின் நாயகனாக கோலி இன்றும் ஜொலித்து வருகிறார். 19 சீசன்களாகத் தனது உடற்தகுதியைச் சீராகப் பராமரித்து, அதே துடிப்புடன் விளையாடி வருவதே இந்த சாதனைக்கு காரணம் என கோலியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.