IPL 2026: சுப்மன் கில்லை சீண்டிய விராட் கோலி.. ஆர்சிபி - குஜராத் போட்டியில் நடந்த சம்பவம்
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலியும், சுப்மன் கில்லும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்ட சம்பவம் அரங்கேறியது. அதிரடி மன்னன் விராட் கோலியும், அவரது இடத்தை நிரப்ப வந்த வீரராக கருதப்படும் சுப்மன் கில்லும் அப்படி என்ன பேசிக்கொண்டார்கள் என்ற சுவாரஸ்யம் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தற்போதைய கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக விராட் கோலியும், அவருக்குப் பின் இந்திய அணியின் எதிர்கால பேட்டிங் நம்பிக்கையாக சுப்மன் கில்லும் பார்க்கப்படுகின்றனர். இரண்டு வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இவர்கள், களத்தில் எதிரெதிர் அணிகளுக்காக விளையாடினாலும், ஒருவரையொருவர் கேலி செய்தபடி மகிழ்ந்த காட்சி, ஆட்டத்தின் இறுக்கமான சூழ்நிலையிலும் ஒரு இதமான தருணமாக அமைந்தது. சுப்மன் கில் பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது விராட் கோலி ஏதோ சொல்லி கில்லை சீண்ட, பதிலுக்கு கில்லும் சிரித்தபடி அதை ரசித்தது மைதானத்தில் இருந்த ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்தப் போட்டியில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லின் பேட்டிங் சற்று வித்தியாசமாகவே அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய அவர், பவர்பிளே ஓவர்களில் பெரும்பாலான நேரம் நான்-ஸ்ட்ரைக்கர் முனையிலேயே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். மறுமுனையில் சாய் சுதர்சன் ஆர்சிபி பந்துவீச்சாளர்களை புரட்டி எடுத்தார். பவர்பிளேயில் சுதர்சன் 29 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், கில் வெறும் 7 பந்துகளை மட்டுமே சந்தித்தார். இறுதிவரை நிதானமாக ஆடிய கில் 24 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
ஆனால், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய் சுதர்சன் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 100 ரன்கள் விளாசி அசத்தினார். இது அவரது 3வது ஐபிஎல் சதமாகும். மேலும், இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த வீரர்களில் ஒருவராகவும் அவர் தனது பெயரைப் பதிவு செய்தார்.
முதல் விக்கெட்டுக்கு சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஜோடி 128 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தின் இறுதியில் களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் வெறும் 10 பந்துகளில் 2 சிக்சர்கள், 1 பவுண்டரியுடன் 23 ரன்கள் எடுக்க, குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்தது. இருப்பினும், சொந்த மண்ணில் அசுர பலத்துடன் களமிறங்கிய ஆர்சிபி அணி, இந்த 206 ரன்கள் என்ற மெகா இலக்கை வெறும் 18.3 ஓவர்களிலேயே எட்டி அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications