விராட் கோலி அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினாலும் குறை சொல்வதா? மஞ்ச்ரேக்கர் பேச்சால் கொதித்த ரசிகர்கள்
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ரன் வேட்டையாடி வரும் நிலையில், இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ள கருத்து ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோலியின் தற்போதைய அதிரடி ஆட்டத்திற்குப் பின்னால் ஒரு "அழுத்தம்" இருப்பதாக மஞ்ச்ரேக்கர் சுட்டிக்காட்டியிருப்பது தான் கோலியின் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
2026 ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 351 ரன்களைக் குவித்துள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், அவரது ஸ்ட்ரைக் ரேட் 162.50 ஆக உள்ளது. இது அவரது வழக்கமான ஆட்டத்தை விட மிகவும் அதிகம். கடந்த சில ஆண்டுகளாகவே கோலியின் ஆட்டத்தில் அதிரடி கூடியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 139.82 ஆக இருந்த அவரது ஸ்ட்ரைக் ரேட், 2024 இல் 154.7 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பை வென்றபோதும் கோலி 144.71 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் மழை பொழிந்தார்.

இது குறித்துப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "கோலி தனது ஆட்ட முறையை மாற்றிக்கொண்டதற்கு முக்கிய காரணம் அவர் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் தான். அவர் மிகவும் மெதுவாக ஆடுகிறார் என்று மக்கள் பேசத் தொடங்கியதால் உருவான அழுத்தமே அவரை வேகமாக ஆடத் தூண்டியது. இதில் பெரிய மாற்றம் எதுவுமில்லை, அவர் வேகமாக ஆட வேண்டும் என்று ஒரு முடிவெடுத்துள்ளார், அவ்வளவுதான். 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை 125 முதல் 130 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக்கொண்டிருந்த கோலி, ஒரு பவுண்டரி அடித்தால் அடுத்த பந்துகளில் ஒன்று அல்லது இரண்டு ரன்கள் எடுப்பதிலேயே குறியாக இருப்பார்" என்று கூறியுள்ளார்.
மேலும் மஞ்ச்ரேக்கர் கூறுகையில், "தனக்கு அடுத்து வரும் பேட்டர்கள் மீது போதிய நம்பிக்கை இல்லாததால், இன்னிங்ஸின் இறுதிவரை தான் களத்தில் இருக்க வேண்டும் என கோலி நினைத்தார். அதனால் அவர் அதிக ரிஸ்க் எடுக்கத் தயங்கினார். ஆனால், கோலி எப்போது அதிரடியாக ஆடத் தொடங்கினாரோ, அப்போதே பெங்களூரு அணியின் தலையெழுத்தும் மாறத் தொடங்கியது. அவர் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தாமல் வேகமாக ரன் சேர்க்கத் தொடங்கியதும், மற்ற வீரர்களும் சுதந்திரமாக விளையாடி ஜொலிக்கத் தொடங்கினர்" எனத் தெரிவித்துள்ளார்.
மஞ்ச்ரேக்கரின் இந்த அதிரடி விளக்கம் கோலி ரசிகர்களைச் சீண்டும் வகையில் அமைந்துள்ளது. கோலி சுயமாகத் தனது திறமையை மேம்படுத்தியதை விடுத்து, விமர்சனங்களுக்குப் பயந்து தான் அவர் மாற்றிக் கொண்டார் என்பது போன்ற கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
தற்போது 2026 ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு கோலியின் இந்த 'சரவெடி' ஆட்டம் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கோலியின் இந்த அதிரடி ஆட்டம் தொடர்ந்தால் இந்த ஆண்டும் ஆர்சிபி அணி இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications

