ஐபிஎல் தொடரின் மாபெரும் சர்ச்சை.. விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையே நடந்தது என்ன? முழு பின்னணி
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆலோசகர் கவுதம் கம்பீர் இடையேயான பனிப்போர் ஐபிஎல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாகும். டெல்லியைச் சேர்ந்த இரு பெரும் ஜாம்பவான்களுக்கு இடையே களத்தில் அப்படி என்ன நடந்தது, எத்தனை முறை இவர்கள் இருவரும் மோதிக் கொண்டார்கள்? என்று பார்க்கலாம்.
2013 சீசனில் நடந்த அந்த மோதல் தான் விராட் கோலி - கவுதம் கம்பீர் இடையே பொதுவெளியில் நடந்த முதல் உரசல். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த அந்தப் போட்டியில் விராட் கோலி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது கொல்கத்தா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமாக கொண்டாடியதை பார்த்து அதிருப்தி அடைந்த கோலி, பெவிலியன் திரும்பும்போது ஏதோ சில வார்த்தைகளை கூறினார்.

இதைக்கண்டு ஆத்திரமடைந்த அப்போதைய கொல்கத்தா கேப்டன் கவுதம் கம்பீர், கோலியை நோக்கி ஆக்ரோஷமாக ஓடி வந்தார். நடுமைதானத்தில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தைப்போர் வெடித்தது. சக வீரர்களும் நடுவர்களும் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்து பிரித்துவிட்டனர். இல்லையெனில் அது பெரும் கைகலப்பில் முடிந்திருக்கும். இந்தச் சம்பவத்திற்காக இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த மோதலின் தாக்கம் அதோடு முடிந்துவிடவில்லை. 2015 சீசனிலும் இருவருக்கும் இடையிலான பகை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. அதே சின்னசாமி மைதானத்தில் நடந்த ஒரு நெருக்கடியான போட்டியின் போது, கோலி எதிர்முனையில் நின்று கொண்டிருந்தார். அப்போது பந்தை பீல்டிங் செய்த கம்பீர், ரன் அவுட் செய்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லாத நிலையிலும் கூட கோலியை நோக்கி பந்தை மிகவும் மூர்க்கத்தனமாக வீசினார். இதனால் அதிர்ச்சியடைந்த கோலி கம்பீரை முறைத்துப் பார்க்க, இருவருக்கும் இடையே மீண்டும் ஒருவரையொருவர் உக்கிரமாக முறைத்து பார்க்கும் சம்பவமும், கடுமையான வார்த்தைப் போரும் அரங்கேறியது.
இந்த மோதல்கள் தான் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிகளை ஒரு சாதாரண லீக் போட்டியாக இல்லாமல் ஒரு மாபெரும் கவுரவப் பிரச்சனையாக மாற்றியது. அடுத்து கவுதம் கம்பீர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது 2023ஆ,ம் ஆண்டு இருவருக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்தது.
கவுதம் கம்பீர் அப்போது ஆர்சிபி அணி குறித்து பேசிய சில விஷயங்கள் விராட் கோலியை சூடேற்ற ஆடுகளத்தில் லக்னோ அணி வீரர்களுக்கு எதிராக கோலி ஆக்ரோஷத்தை காட்டினார். அதனால் போட்டி முடிந்த உடன் கம்பீர் - கோலி இடையே வார்த்தைப் போர் நடந்தது. இரு அணிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இந்த மோதலை தடுத்தனர். இல்லையெனில் இது ஐபிஎல் தொடரின் கருப்புப் பக்கமாக இருந்திருக்கும்.
அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு முதல் கோலி - கம்பீர் தங்கள் மோதல்களை மறந்து சுமூகமான உறவை கடைபிடித்தனர். பின்னர் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளரான போது இருவரும் அதிகமுறை பேசிக் கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.


Click it and Unblock the Notifications
