IPL 2026: ஓவராக சவால் விட்ட கோலி.. ஐஸ் கட்டியாக நின்ற ப்ரார்.. தரம்சாலாவில் மோதல்.. என்ன நடந்தது?
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரில் தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில், விராட் கோலி மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் இடையே நடந்த மோதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தப் போட்டியின் போது விராட் கோலி, ஹர்ப்ரீத் ப்ராரை சீண்ட முயல, அதற்கு அவர் காட்டிய 'சைலண்ட்' ரியாக்ஷன் கவனத்தை ஈர்த்தது.
தரம்சாலா மைதானத்தில் பெங்களூரு அணி பேட்டிங் செய்தபோது, விராட் கோலி தனது அதிரடி ஆட்டத்தால் பஞ்சாப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்து நல்ல ஃபார்மில் இருந்த கோலி, மைதானத்தில் தனது வழக்கமான ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆட்டத்தின் போது பஞ்சாப் வீரர் ஹர்ப்ரீத் ப்ரார் மற்றும் கோலி இடையே இருமுறை மோதல் போன்ற சூழல் உருவானது.

நேருக்கு நேர் மோதல்
ஆட்டத்தின் 9-வது ஓவரை அஸ்மதுல்லா உமர்சாய் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தை கோலி பாயிண்ட் திசையை நோக்கித் தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஆனால், மறுமுனையில் இருந்த படிக்கல் ரன் எடுக்க மறுத்து கோலியைத் தடுத்தார். அதற்குள் கோலி பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். அப்போது பந்தை எடுத்த ஹர்ப்ரீத் ப்ரார் ரன்-அவுட் செய்ய முயன்றார். ஆனால் கோலி பதற்றமடைந்து பின்னோக்கி ஓடாமல், அப்படியே நின்று ப்ராரை நேருக்கு நேர் பார்த்தார். 'முடிந்தால் விக்கெட்டை நோக்கி அடி' என்பது போல ஒரு சவாலான பார்வையைக் கோலி வீசினார். ப்ராரும் பந்தை எறியாமல் கோலியை முறைத்துப் பார்த்தபடி நின்றார்.
கோலியின் கிண்டல் - ப்ராரின் மௌனம்
இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 14-வது ஓவர் முடிந்த பிறகு, கோலி சிரித்துக்கொண்டே ஹர்ப்ரீத் ப்ரார் அருகே சென்று ஏதோ கிண்டலாகக் கூறினார். ஆனால், அதற்கு எந்தப் பதிலும் சொல்லாத ப்ரார், கோலியைக் கண்டுகொள்ளாமல் மௌனமாகத் தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றார். பொதுவாக வீரர்களின் சீண்டல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுக்கும் கோலிக்கு, ப்ராரின் இந்த அமைதி ஒரு 'ஐஸ்' கட்டியைப் போன்ற மௌனமாக அமைந்தது.
ஏற்கனவே கடந்த சீசனில் இதே போன்ற ஒரு நிகழ்வு இவர்கள் இருவருக்கும் இடையே நடந்தது. அப்போதும் கோலி வம்பிழுக்க, ப்ரார் சிரித்துக்கொண்டே கடந்து சென்றார். இந்தப் போட்டியில் ஜேக்கப் பெத்தேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு நம்பிக்கை அளித்த ப்ரார், கோலியின் கிண்டல்களைத் தனது மௌனத்தால் எதிர்கொண்டது ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications
