IPL 2026: ஆர்சிபி அணியை எச்சரித்த வீரேந்தர் சேவாக்.. “போன மேட்ச் 1 விக்கெட் கூட வீழ்த்தவில்லை”
தரம்சாலா: 2026 ஐபிஎல் தொடரின் முதல் குவாலிபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் பெங்களூரு அணியை விட குஜராத் அணியின் பந்துவீச்சு மிகவும் பலமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெங்களூரு பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கியதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து சேவாக் கூறுகையில், "ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஹேசில்வுட் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 106 ரன்களை விட்டுக்கொடுத்தனர். பெங்களூரு அணி இதனை ஒரு மோசமான நாள் என்று கடந்து செல்லலாம். ஆனால், தர்மசாலா மைதானத்தின் எல்லைகள் மிகவும் சிறியவை. மீண்டும் பந்துவீச்சாளர்கள் சொதப்பினால் 255 ரன்களுக்கு மேல் கூட ரன்கள் செல்ல வாய்ப்புள்ளது. குஜராத் அணியின் பந்துவீச்சு மிகச்சிறப்பாக இருப்பதால் பெங்களூரு அணி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

குஜராத் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ககிசோ ரபாடா மற்றும் முகமது சிராஜ் கூட்டணியே முக்கிய காரணமாக உள்ளது. ரபாடா இந்த சீசனில் 14 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 17 விக்கெட்டுகளைச் சாய்த்து சாதனை படைத்துள்ளார். மற்றொரு புறம் சிராஜ் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இந்த சீசனில் அதிகபட்சமாக 148 டாட் பால்களை வீசி பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளார். இவர்கள் இருவரது கூட்டணியும் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.
மறுபுறம் பெங்களூரு அணி இந்த சீசனில் விளையாடிய பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் 200-க்கும் அதிகமான ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது. புவனேஷ்வர் குமார் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தாலும், ஒட்டுமொத்தமாக அந்த அணியின் பந்துவீச்சு சீராக இல்லை என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.
விராட் கோலி, பில் சால்ட் மற்றும் ரஜத் படிதார் ஆகியோரின் அதிரடி பேட்டிங்கை பெங்களூரு அணி நம்பியுள்ளது. அதே சமயம் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சனின் சிறப்பான பேட்டிங்குடன், துல்லியமான பந்துவீச்சைக் கொண்டுள்ள குஜராத் அணி இறுதிப்போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த போட்டியில் எந்த அணியின் பந்துவீச்சு நெருக்கடியைச் சமாளிக்கிறதோ அந்த அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications