மும்பை: குஜராத் அணிக்காக விளையாடி வரும் வாஷிங்டன் சுந்தரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சிஎஸ்கே அணிக்காக ஆடி வந்த அஸ்வின் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவரின் இடத்தை வாஷிங்டன் சுந்தர் மூலமாக நிரப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 2வது வாரத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மினி ஏலம் சிஎஸ்கே, ராஜஸ்தான், டெல்லி, கேகேஆர் உள்ளிட்ட பல்வேறு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த அணிகள் மெகா ஏலத்தில் முதலீடு செய்த வீரர்களிடம் இருந்து எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கவில்லை.

குறிப்பாக சிஎஸ்கே அணி மெகா ஏலத்தின் போது அஸ்வின், தீபக் ஹூடா, ராகுல் திரிப்பாட்டி உள்ளிட்ட சீனியர் வீரர்களில் முதலீடு செய்தது. ஆனால் யாரும் எதிர்பார்த்த அளவிற்கு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால், மினி ஏலத்தில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே அஸ்வினுடன் பேசி ஐபிஎல் தொடரில் இருந்தே ஓய்வு பெற வைத்திருக்கிறது.
இதனிடையே சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வரும் முயற்சிகளும் நடந்தன. ஆனால் ராஜஸ்தான் அணியின் டிமாண்ட் மிகப்பெரிய அளவில் இருந்ததால், சிஎஸ்கே அணி விலகிக் கொண்டது. இந்த நிலையில் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை நோக்கி முதலீடு செய்யலாம் என்று முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. கடந்த சீசனில் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் படேல் உள்ளிட்ட இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
அதனால் அஸ்வினின் இடத்தையும் இளம் வீரரை கொண்டு நிரப்ப சிஎஸ்கே அணி முடிவு செய்திருக்கிறது. அஸ்வினின் இடத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தரை கொண்டு வரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. கடந்த சீசனில் வாஷிங்டன் சுந்தர் குஜராத் அணிக்காக ரூ.3.2 கோடிக்கு வாங்கப்பட்டார். ஆனால் மொத்தமாக 165 பந்துகளை மட்டுமே வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
குஜராத் அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கொடுக்க முடியாத நிலை உருவாகியது. இந்த சூழலில் வாஷிங்டன் சுந்தரை டிரேடிங்கில் வாங்க சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. அதற்கு குஜராத் அணியும் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சிஎஸ்கே அணியிடம் பெரிய டிமாண்ட் எதுவும் முன் வைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தர் மட்டும் சிஎஸ்கே அணிக்கு கொண்டு வரப்பட்டால், அது சேப்பாக்கம் பிட்சில் மிகப்பெரிய ஜாக்பாட்டாக அமையும். சேப்பாக்கம் பிட்சில் விளையாடிய அனுபவத்துடன் இருக்கும் வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா மற்றும் நூர் உடன் சேர்ந்து பட்டையை கிளப்ப முடியும். இந்த கூட்டணியே மிகவும் அபாயகரமானதாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.