மும்பை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் தற்போது அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இளம் வீரர்களை குறி வைத்து அதிக அளவு வீரர்களை வாங்கி வருகிறது.
19 வயது வீரரான ராஜஸ்தானை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மாவின் பெயர் வந்தவுடன் சிஎஸ்கே அணி அவரை போட்டி போட்டு வாங்கியது. கொல்கத்தா அணியும் அவரை விடாத மாதிரி தெரியவில்லை. எனினும் சிஎஸ்கே அணி கடைசி வரை நிலைத்து நின்று ஏலம் கேட்டு 14 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு கார்த்திக் சர்மாவை வாங்கியது.

அடிப்படை விலை 35 லட்சத்திலிருந்து 14 கோடியே 20 லட்சம் வரை உயர்ந்தது. கார்த்திக் சர்மா யார் என்று தற்போது பார்க்கலாம் 2025- 26 சையது முஸ்தாக் அலி கிரிக்கெட் தொடரில் கார்த்திக் சர்மா, ஐந்து இன்னிங்ஸ் விளையாடி 133 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 160 ஆகும்.
குறிப்பாக கர்நாடகாவுக்கு எதிராக 31 பந்துகளில் 46 ரன்கள் எடுத்திருந்தார். இவருடைய சிக்ஸர் அடிக்கும் திறமையை முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பீட்டர்சன், அஸ்வின் ஆகியோர் பாராட்டியுள்ளனர். கார்த்திக் சர்மா, ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் அறிமுக ஆட்டத்திலேயே 115 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.
இதேபோன்று தன்னுடைய முதல் உள்நாட்டு 50 ஓவர் போட்டிகளில் 90 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இதில் ஏழு பவுண்டரி, 11 சிக்ஸர்கள் அடங்கும். கடந்த 2024- 25 விஜய் ஹசாரே தொடரில் 9 ஆட்டங்களில் விளையாடி 445 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 55 என்று அளவில் இருந்தது. இதில் இரண்டு சதம், இரண்டு அரை சதம் அடங்கும்.
19 வயது வீரரான கார்த்திக் சர்மா தீபக் சாகர் நடத்திவரும் கிரிக்கெட் அகாடமியில் இணைந்து பயிற்சி செய்து வருகிறார். தீபக்சாகர் அறிவுறுத்தலின்படியே ஐபிஎல் அணிகள் இவரை வாங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஏலத்திற்கு முன்பே இவருடைய திறமையை கேள்விப்பட்டு சிஎஸ்கே, மும்பை, ஆர் சி பி,டெல்லி உள்ளிட்ட அணிகள் இவரை பயிற்சி சோதனைக்கு அழைத்து இருக்கிறது.இதுவரை உள்ளூரில் 12 டி20 போட்டிகளில் விளையாடி 334 ரன்கள் அடித்திருக்கிறார். சிஎஸ்கே அணி இவ்வளவு பணம் கொடுத்து எடுத்தாலும் அவருக்கு ஆர் சி பி அணி மிகவும் பிடிக்குமாம்.