சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் பத்து வீரர்களை விடுவித்து இருக்கிறது. இதில் ஜடேஜாவுக்கு பதில் சஞ்சு சாம்சனை வாங்கி இருக்கிறது. இதன் மூலம் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி 9 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்.
கைவசம் 43 கோடியே 40 லட்சம் ரூபாய் இருக்கிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் இருந்தார். தற்போது சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்குள் அதிகாரப்பூர்வமாக வந்துவிட்டதால், புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலே இருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறி ஓரங்கட்டப்பட்டார். இதனால் ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டார். ஒரு கட்டத்தில் அணி நிர்வாகம் ரியான் பராக்கை கேப்டனாக முழு நேரம் செயல்படுத்த வேண்டும் என்று யோசனை வழங்கியது. இதற்கு சஞ்சு சாம்சன் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் தான் அந்த அணிக்குள் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. தற்போது சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணிக்கு வந்திருக்கிறார். தோனி போன்ற மிகப் பெரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது அந்த பணியை ருதுராஜ் கவனிக்கிறார். தோனிக்கு மாற்று வீரராகவும் எதிர்காலத்திற்கான வீரராகவும் சஞ்சு சாம்சன் பார்க்கப்படுவதால் அவர் புதிய கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இது தொடர்பான எழுந்த விவாதங்களுக்கு தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதன்படி சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் என்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். இதன் மூலம் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்றும் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இருப்பார் என்றும் தெரிகிறது.
ஒருவேளை ருதுராஜ்க்கு காயம் ஏற்பட்டாலும் இல்லை அவருடைய கேப்டன்சி சோபிக்காத நிலையில் இருந்தால் சஞ்சு சாம்சன் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. சாம்சன் கேப்டன் பி என்ற திட்டத்தில் வைத்து தான் அணி நிர்வாகம் வாங்கி இருக்கிறது.