மும்பை: 2026 ஐபிஎல் சீசனுக்கான முழுமையான லீக் சுற்று அட்டவணையை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. மார்ச் 28 அன்று தொடங்கவுள்ள இந்த பிரம்மாண்ட தொடரில் மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த முறை லீக் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே மோத உள்ளன.
இந்த சீசனில் பங்கேற்கும் 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
குழு ஏ: சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ்.
குழு பி: மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ஆகிய இரண்டு அணிகளும் ஒரே குழுவில் (குழு ஏ) இடம் பெற்றுள்ளன. ஐபிஎல் விதிகளின்படி, ஒரே குழுவில் உள்ள அணிகள் தங்களுக்குள் தலா ஒருமுறை மட்டுமே மோதிக் கொள்ளும். அதேசமயம், மற்றொரு குழுவில் உள்ள அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.
இந்த விசித்திரமான விதிமுறை காரணமாகவே, ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் சிஎஸ்கே - ஆர்சிபி மோதல் ஏப்ரல் 5 அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே நடைபெற உள்ளது. ஆனால், சிஎஸ்கே அணி எதிர் குழுவில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இரண்டு முறை மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

2026ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மார்ச் 28 அன்று ஆர்சிபி மற்றும் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டு பெங்களூருவில் தனது பயணத்தை தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 5-ல் சிஎஸ்கே அணியை ஆர்சிபி எதிர்கொள்கிறது. இந்த சீசனில் ஆர்சிபி அணி தனது இரண்டாவது சொந்த மைதானமாக ராய்ப்பூரைத் தேர்வு செய்துள்ளது. அங்கு மே 10 அன்று மும்பை அணியுடனும், மே 13 அன்று கொல்கத்தா அணியுடனும் ஆர்சிபி மோத உள்ளது.

ஒவ்வொரு ஐபிஎல் அணியும் தலா 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. மொத்தம் 12 நாட்கள் தலா இரண்டு போட்டிகள் வீதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. லீக் சுற்றுகள் முடிந்த பிறகு பிளே ஆஃப் போட்டிகளுக்கான இடங்கள் மற்றும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடர் மார்ச் இறுதியில் களைகட்டத் தொடங்க உள்ளது.