IPL 2026: “ரிஷப் பண்ட் கேப்டன் பதவியைப் பறித்தால் தான் சரியா வரும்.. ஏன்னா..”முன்னாள் வீரர்கள் யோசனை
மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தொடர் தோல்விகளால் துவண்டு போயுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய தோல்விக்குப் பிறகு, அந்த அணியின் பிளே ஆப் கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. இந்த நிலையில், அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன. பண்ட் கேப்டனாகத் தொடர்வது அவரது பேட்டிங்கையும் பாதிப்பதாக முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது லக்னோ அணியின் அதிரடி மாற்றத்திற்கு வழிவகுக்குமா என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரிஷப் பண்ட் 2025 ஆம் ஆண்டு லக்னோ அணியில் இணைந்து கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, பண்ட் ஒரு நீண்ட கால அடையாளமாக இருந்து கோப்பைகளை வென்று கொடுப்பார் என நம்பினார். ஆனால் அவரது எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் முடிந்துள்ளது. கடந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடிய பண்ட் வெறும் 269 ரன்கள் மட்டுமே எடுத்தார். நடப்பு 2026 சீசனிலும் அவரது ஆட்டம் திருப்திகரமாக இல்லை. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 204 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள பண்ட்டின் ஸ்ட்ரைக் ரேட் 128.30 ஆகக் குறைந்துள்ளது.

இது குறித்துப் பேசிய முன்னாள் வீரர் ரோஹன் கவாஸ்கர், "சில நேரங்களில் ஒரு வீரர் மீது அதிக அழுத்தம் இருக்கும்போது அவரை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிப்பதே நல்லது. பண்ட் ஒரு திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கேப்டன்சி சுமை அவரது இயல்பான அதிரடி ஆட்டத்தைத் தடுக்கிறது. அவரை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாட விடுவது அவரது பழைய ஃபார்மை மீட்க உதவும்" என்று கூறியுள்ளார். இதே கருத்தை வலியுறுத்திய மனோஜ் திவாரி, "கேப்டன்சி அழுத்தத்தால் ஒரு சிறந்த சர்வதேச தரத்திலான பேட்ஸ்மேனை நாம் இழந்து வருகிறோம். லக்னோ அணி அவரை அந்தச் சுமைகளில் இருந்து விடுவித்துச் சுதந்திரமாக விளையாட விட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
பண்ட்டுக்குப் பதிலாக யார் கேப்டன் என்ற கேள்விக்கு, தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் எய்ட்ன் மார்க்ரம் பெயர் அடிபடுகிறது. தென்னாப்பிரிக்க டி20 அணியின் கேப்டனான மார்க்ரம், எஸ்ஏ20 தொடரில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியைத் தொடர்ந்து 2 முறை சாம்பியன் ஆக்கிய அனுபவம் கொண்டவர். அமைதியாகவும் நிதானமாகவும் அணியை வழிநடத்தக்கூடிய மார்க்ரம், லக்னோ அணிக்குச் சரியான தேர்வாக இருப்பார் என்று வசீம் ஜாபர் போன்ற ஜாம்பவான்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர். லக்னோ அணி நிர்வாகம் இந்த கடினமான முடிவை எடுக்குமா என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
