மும்பை: வங்கதேசத்தில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் இந்துக்கள் மீதான தாக்குதல்கள் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வாங்கியுள்ள வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில், அவரை அணியிலிருந்து நீக்கினாலும், அவருக்குரிய முழு சம்பளத்தையும் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தள்ளப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2026 மினி ஏலத்தில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை ரூ. 9.20 கோடி என்ற பெரும் தொகைக்கு ஷாருக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. ஆனால், வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான வன்முறையைக் காரணம் காட்டி, அவரை ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதிக்கக் கூடாது எனப் பாஜக உள்ளிட்ட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

அரசியல் அழுத்தம் காரணமாக முஸ்தஃபிசுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் கழற்றிவிட்டால், அவருக்குப் பணம் கொடுக்க வேண்டுமா? இங்குதான் ஐபிஎல் விதிகள் சிக்கலை ஏற்படுத்துகின்றன. ஐபிஎல்லில் பொதுவாக 'விளையாடவில்லை என்றால் ஊதியம் இல்லை' (No play, no pay) என்ற விதி உள்ளது. ஆனால், இந்த விதி இரண்டு சூழ்நிலைகளில் மட்டுமே செல்லுபடியாகும்:
முதல் விதி - சம்பந்தப்பட்ட வீரரே சொந்தக் காரணங்களுக்காகத் தொடரிலிருந்து விலகினால் சம்பளம் அளிக்க வேண்டாம்.
இரண்டாவது விதி - ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்பே காயம் காரணமாக அந்த வீரர் விலகினால் சம்பளம் அளிக்க வேண்டாம்.
இந்த இரண்டு காரணங்களுக்காக முஸ்தஃபிசுர் வெளியேறினால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவருக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கத் தேவையில்லை.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் தான் விளையாடத் தயார் என்றும், உடற்தகுதியுடன் இருப்பதாகவும் அறிவித்த பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் அரசியல் காரணங்களுக்காக அவரை அணியிலிருந்து நீக்கினால், கதை வேறு. ஏலத்திற்குப் பிறகு வீரருக்கும் அணிக்கும் இடையே ஒரு சட்டப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும். அதன்படி, ஒரு வீரர் விளையாடத் தயாராக இருந்தும், அணி நிர்வாகம் அவரை ஆடும் லெவனில் சேர்க்காமல் பெஞ்சில் அமர வைத்தாலோ அல்லது அரசியல் அழுத்தத்தால் அணியை விட்டு நீக்கினாலோ, அவருக்குப் பேசப்பட்ட ரூ. 9.2 கோடியையும் முழுமையாகக் கொடுத்தே ஆக வேண்டும்.
சூதாட்டம், ஊக்கமருந்து பயன்பாடு அல்லது ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறுதல் போன்ற காரணங்களுக்காக ஒரு வீரர் தடை செய்யப்பட்டால் மட்டுமே அணி நிர்வாகம் பணம் கொடுக்கத் தேவையில்லை. அரசியல் போராட்டம் என்பது இந்த விதிகளுக்குள் வராது.
எனவே, இந்தச் சிக்கலைத் தவிர்க்க வேண்டுமென்றால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் முஸ்தஃபிசுர் ரஹ்மானுடன் பேசி, 'பரஸ்பர ஒப்புதலின்' பேரில் ஒப்பந்தத்தை ரத்து செய்தால் மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த முடியும்.
விளையாட்டு ரீதியாகப் பார்த்தால், முஸ்தஃபிசுர் இல்லாதது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்குப் பெரிய பின்னடைவாக இருக்காது. ஆனால், ஒருவேளை அவரை அணியிலிருந்து நீக்க முடிவு செய்தால், ஒரு பந்து கூட வீசாமலே 9.2 கோடி ரூபாயை முஸ்தஃபிசுர் ரஹ்மான் தட்டிச் செல்லும் சூழல் உருவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் என்ன முடிவெடுக்கப் போகிறது?