வைபவ் சூர்யவன்ஷி-க்கு நான் அண்ணன் இல்ல.. 15 வயது வீரரை பார்த்து தான் நானே விளையாடுகிறேன்-ஜெய்ஸ்வால்
கவுஹாத்தி: ஐபிஎல் 2026 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 77 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. ஜெய்ஸ்வால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடைசி 5 இன்னிங்சில் 328 ரன்கள் குவித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 109.33 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 197 என்ற அளவில் உள்ளது.
இந்த 5 இன்னிங்சில் மும்பைக்கு எதிராக ஜெய்ஸ்வால் 21 சிக்சர்களும், 37 பவுண்டரிகளையும் விளாசியுள்ளார்.இது குறித்து போட்டி முடிந்த பிறகு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், "பவர்பிளேயில் மூன்று ஓவர்கள் மட்டுமே இருந்ததால், யாரைத் தாக்கலாம் அல்லது ரன்களை எப்படிப் பெறலாம் என நான் மனதில் திட்டம் வைத்திருந்தேன்."

"சஹார் பாய் பந்துவீச வந்ததும், அவரை இலக்கு வைக்க முடிவு செய்தேன். பும்ரா பாய் வந்தபோது, வைபவ் அவரை திறம்பட எதிர்கொள்வார். நான் வேறு ஒருவரைத் தாக்கலாம் எனக் கணக்கிட்டேன். எந்த பந்துவீச்சாளரை அணுகுவது, எந்த ஷாட்களை ஆடுவது எனத் தொடர்ந்து சிந்தித்தேன். நான் ஆட்டத்திற்குள் முழுமையாக மூழ்கியிருந்தேன்," என்றார்.
மூன்று வடிவ கிரிக்கெட்டில் மாறுவது சுலபமா எனக் கேட்டபோது, "இது எளிதல்ல. ஆனாலும், ஒவ்வொரு பயிற்சிக்கும் முன்னரும் சிறந்ததைச் செய்ய முயல்கிறேன். நான் எப்படி மேம்படலாம், வெவ்வேறு ஷாட்களை எப்படி உருவாக்கலாம் என்பதில் கவனம் செலுத்துகிறேன். எந்த விக்கெட்டில் எந்த ஷாட்கள் சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டு, அவற்றை ஆட நான் எப்போதும் முயற்சிப்பேன். இந்தப் பயிற்சி தொடர்ந்து உதவியுள்ளது," என வீரர் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட ஆட்ட பாணியுடன் விளையாட திட்டமிடுவது பற்றி பேசிய அவர், "நான் எப்போதும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, அணிக்காக என்ன செய்ய முடியும், எப்படி விளையாட முடியும் என்று சிந்திக்கிறேன். என் ஆட்டத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கிறேன். ஒரு ஷாட் அவசியம் என்று கண்டால், அதை செயல்படுத்துவேன். நான் எப்போதும் அணியை முதலில் வைத்து, அதன் தேவைக்கேற்ப விளையாட முயற்சிக்கிறேன்" என்று உறுதியாகக் கூறினார்.
சக வீரர் வைபவ்வுடனான உரையாடல்கள் பற்றிப் பேசுகையில், “வைபவ் விளையாடும் விதம் உண்மையிலேயே அசாத்தியமானது. அவர் கடினமாக உழைக்கிறார். அவருடன் களத்தில் இருக்கும்போது, நானும் புதிய ஷாட்களை உருவாக்க வேண்டும் என்று உந்துதல் கிடைக்கும். நாங்கள் எப்படிச் செயல்படலாம் என்ற விவாதங்கள் தொடரும்."
"வைபவ் ஒரு பந்துவீச்சாளரைத் தாக்க முயற்சித்தால், 'நீ தைரியமாக விளையாடு, சுதந்திரமாக அடி' என்று நான் அவனுக்கு எப்போதும் நேர்மறையான தகவல்களைக் கொடுப்பேன். களத்தில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, சிறந்த ஆட்டத்திற்காகத் தெளிவான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வது எங்கள் வழக்கம்," என விளக்கினார்.
வைபவிற்கு ஒரு மூத்த அண்ணன் போன்ற வழிநடத்துகிறீர்களா எனக் கேட்டபோது, “நான் அப்படி நினைக்கவில்லை. வைபவ் திறமையான வீரர், விளையாட்டை மிக நன்றாகப் புரிந்துகொள்பவர். அவர் தனக்குத்தானே சிறப்பாகச் செயல்படக்கூடியவர். அவர் தனது ஆட்டத்தை முழுமையாக அனுபவித்து, நம்பமுடியாத அளவிற்கு சிறப்பாக விளையாடுகிறார்,” என அந்த வீரர் கருத்துத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications