சத்தியமா இது நம்ம டோணியே இல்லை...!
அகமதாபாத்: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியைத் தழுவி, நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வீழ்ச்சியைச் சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸின் ரசிர்கள், டோணி நேற்று ஆடிய விதத்தைப் பார்த்து இன்னும் அதிர்ச்சி குறையாமல் உள்ளனர். கேப்டன் டோணியும் கூட நேற்றைய தனது ஆட்டம் சரியல்ல என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.
வழக்கமான டோணி போலவே அவர் நேற்று ஆடவில்லை. தற்காப்பு ஆட்டத்திற்குள் அவர் புகுந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி விட்டது. மறு முனையில் பிராவோ பிரமாதமாக அடித்து ஆடி வந்த நிலையில் டோணி அடக்கி வாசித்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.
டோணி அடக்கி வாசித்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முக்கியப் பேட்ஸ்மேன்களை படு வேகமாக பறி கொடுத்தது ஆகியவை காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னையை சின்ன ஸ்கோருக்குள் சுருக்கி விட்டது, கடைசியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியும் விட்டது.

ஏ கிளாஸ் ஆட்டம்
ராஜஸ்தான் ராயல்ஸின் நேற்றைய ஆட்டம் நிச்சயம் ஏ கிளாஸ் ஆக இருந்தது. பந்து வீச்சில் கலக்கிய அவர்கள் பின்னர் பேட்டிங்கில் பிரமிக்க வைத்து விட்டனர்.

வாட்சன் - ரஹானே ரகளை
கேப்டன் ஷேன் வாட்சனும், அஜிங்கியா ரஹானேவும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தனர். வாட்சன் 73 ரன்களையும், ரஹானே ஆட்டமிழக்காமல் 76 ரன்களையும் குவித்து ராஜஸ்தானின் வெற்றியை எளிதாக்கி விட்டனர்.

பினிஷிங் சரியில்லாமல் போச்சே
வழக்கமாக டோணியின் கடைசி நேர பேட்டிங் அமர்க்களப்படும். அதில் புதிய வரலாறை படைத்திருப்பவர் டோணி. பெஸ்ட் பினிஷர் என்ற பெயர் வேறு அவருக்கு உள்ளது. ஆனால் நேற்று தலைவர் சற்று ஏமாற்றி விட்டார்.

ஏன் இந்த தடுமாற்றம்...!
நேற்று அடித்தே ஆடவில்லை டோணி. 37 பந்துகளைச் சாப்பிட்ட அவர் 31 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இது வழக்கமா டோணியின் கடைசி நேர ஆட்டமாகவே இல்லை.

4 பவுண்டரிகள்தான்
தனது ஆட்டத்தின்போது மொத்தமே 4 பவுண்டரிகளைத்தான் விளாசியிருந்தார் டோணி. மறுபக்கம் பிராவோ அடித்து ஆடி அமர்க்களப்படுத்தி வந்தார். டோணியும் அடித்து ஆடியிருந்தால் நிச்சயம் சற்று பெரிய ஸ்கோரை எட்டியிருக்கலாம்.

பிராவோ, டோணியால்
ஒரு கட்டத்தில் மகா மோசமான நிலையில் இருந்தது சென்னை. அதாவது 98.1 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 65 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த பிராவோ, டோணி இணை, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் என்ற கெளரவமான நிலைக்குக் கொண்டு வந்தனர். ஆனால் அது போதுமானதாக இல்லாமல் போய் விட்டது.

நிறைய சாப்பிட்டுட்டேன்
போட்டிக்குப் பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், நன்றாகத்தான் ஆரம்பித்தோம். ஆனால் இடையில் நான் நிறைய பந்துகளைச் சாப்பிட்டு விட்டேன். இது நல்ல பிட்ச். ராஜஸ்தான் சிறப்பாக ஆடியது என்றார்.


Click it and Unblock the Notifications