பெங்களூரு: நான்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ஐபிஎல் போட்டிகளில் பெட்டிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் ஐபிஎல் கமிஷனர் லலித் மோடி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் சரமாரியாக டிவிட்களைப் போட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தில் குறைந்தது நான்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
பிரேக்கிங் ஸ்டோரி என்ற பெயரில் லலித் மோடி இன்று பல டிவிட்களை போட்டுள்ளார். அதில், இதுதான் எனது பிரேக்கிங் ஸ்டோரி. மரியாதைக்குரிய சுப்ரீம் கோர்ட் பெட்டிங்கில் ஈடுபட்ட வீரர்களின் பெயர்களை வெளியிடுவதாக இருந்தால் அதில் குறைந்துத நான்கு பேர் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார் மோடி.
அந்த நான்கு பேரில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் அடக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த சூதாட்டத்தில் மிகப் பெரிய அளவிலான பணம் புழங்கியுள்ளது. ஒரு போட்டிக்கு ரூ. 9000 கோடி முதல் ரூ. 10,000 கோடி வரை புழங்கியுள்ளது.
இந்த மோசமான பெட்டிங் விவகாரத்தில் ஜோக்கர்களான பிசிசிஐ, ஐசிசி, ஐபிஎல், இந்தியா சிமெண்ட்ஸ், அனுராத் தாக்கூர் ஆகியோர் மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்.
இதுகுறித்து நான் நீண்ட காலமாக சொல்லி வருகிறேன். இனிமேலாவது ஊடகங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். சாதாரண தொகை அல்ல, ரூ. 9000 கோடி, 10,000 கோடி என்பது மிகப் பெரிய தொகை. உண்மையான சாத்தான் யார் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ளார் மோடி.
இன்னொரு டிவிட்டில் யாருடைய பெயர் இடம் பெற்றுள்ளது என்று என்னைக் கேட்காதீர்கள். ஏற்கனவே ஒரு பெயரை ஆதாரத்துடன் வெளியிட்டுத்தான் நான் பெரும் விலையைக் கொடுக்க நேரிட்டு விட்டது என்று கூறியுள்ளார் லலித் மோடி.
ஐபிஎல் கமிஷனராக இருந்து முதல் இரு தொடர்களை நடத்திக் கொடுத்தவர் லலித் மோடி. ஆனால் மிகப் பெரிய அளவில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து மோடி நீக்கப்பட்டார். அவர் மீது சென்னை போலீஸில் பிசிசிஐ சார்பில் ரூ. 100 கோடி நிதி முறைகேடு தொடர்பான புகாரும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து தலைமறைவான லலித் மோடி நாட்டை விட்டே ஓடி விட்டார். தற்போது லண்டனில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி பிசிசிஐ மற்றும் சீனிவாசன் மீது புகார்களைக் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.