டெல்லி: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கொளுத்த அளவில் பணத்தை வாரிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரின் 5வது போட்டித் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி மே 27ம் தேதி முடிவடைகிறதாம்.
இதை இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று முறைப்படி அறிவித்தது. மொத்தம் 54 நாட்கள் போட்டிகள் நடைபெறும். 74 போட்டிகள் ரசிகர்களுக்கு விருந்து படைக்கக் காத்துள்ளன.
போட்டிக்கான கால அட்டவணையை விரைவில் வெளியிடவுள்ளதாக ஐபிஎல் ஆணையர் சிரயு அமீன் கூறியுள்ளார். இதற்கு முன்பு நடந்த போட்டிகளைப் போலவே ஐந்தாவது சீசன் போட்டிகளும் அமர்க்களமாக இருக்கும் என்றும் அமீன் கூறினார்.
சமீபத்தில் முடிவடைந்த நான்காவது சீசன் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக 2வது முறையாக வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.