
ராஜஸ்தான் பேட்டிங்
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. வழக்கமாக 2-வது விக்கெட்டுக்கு ஆடும் கேப்டன் ஷேன் வாட்சன் இந்த ஆட்டத்தில் அங்கித் ஷர்மாவுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்தார்.

அங்கித் ஷர்மா 30 ரன்கள்
இருவரும் அவசரமின்றி நிதானமாக ஆடினார்கள். அஸ்வின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விரட்டியடித்த அங்கித் ஷர்மா, அவரது அடுத்த ஓவரில் கேட்ச் ஆனார். அங்கித் ஷர்மா 30 ரன்களுடன் வெளியேறினார்.

10 ஓவரில் வலுவான நிலை
அடுத்து ரஹானே இறங்கினார். மறுமுனையில் ரன்சேகரிப்பில் கவனம் செலுத்திய ஷேன் வாட்சன், அறிமுக வீரரான தமிழகத்தின் விஜய் சங்கரின் ஒரே ஓவரில் பவுண்டரியும், 2 சிக்சரும் பறக்க விட்டு அசத்தினார். முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 84 ரன்களுடன் நல்ல நிலையில் இருந்தது.

கடைசி 10 ஓவரில் சொதப்பல்
ரஹானே தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக அந்த அணியின் ரன்வேகம் சரிவுக்குள்ளானது. அரைசதத்தை கடந்த ஷேன் வாட்சன் 51 ரன்களில் மொகித் ஷர்மாவின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார். ஒரு கட்டத்தில் 160 ரன்களை எளிதில் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தான் 150 ரன்களை கூட தொட முடியாமல் போனது. 20 ஓவர்களில் அந்த அணியால் 8 விக்கெட்டுக்கு 148 ரன்களே எடுக்க முடிந்தது.

மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள்
சென்னை தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஜடேஜா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

ஸ்மித் அபாரம்
அடுத்து சென்னை அணியின் இன்னிங்சை வெய்ன் சுமித்தும், பிரன்டன் மெக்கல்லமும் தொடங்கினர். ரெய்னா 2 ரன்னிலும் வெய்ன் சுமித் 44 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

மந்தமான ஆட்டம்
ஸ்மித் வெளியேறிய பிறகு, 9-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர் வரை பந்து ஒரு தடவை மட்டுமே எல்லைக்கோட்டை முத்தமிட்டது. இதனால் ரன் தேவை அதிகமாகி, நெருக்கடி உருவானது.

பரபரப்பான கடைசி ஓவர்கள்
கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டதால, பரபரப்பு உண்டானது. கேப்டன் டோணியும் ஜடேஜாவும் களத்தில் நின்றனர். 19-வது ஓவரை வீசிய கெவோன் கூப்பரின் ஓவரில் ஜடேஜா ஒரு சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 13 ரன்கள் வந்தது.

கடைசி ஓவர் வெற்றி
இதையடுத்து கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டன. உச்சக்கட்ட டென்ஷன்குக்கு மத்தியில், 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பவுல்க்னெர் வீசினார். இதில் முதல் பந்தில் ஜடேஜா ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தை டோணி சிக்சருக்கு அனுப்பி, பதற்றத்தை தணித்தார். 3-வது பந்தில் 2 ரன்கள் எடுத்த டோணி, அடுத்த பந்தில் ராஜஸ்தானின் மோசமான பீல்டிங்கை பயன்படுத்தி 3 ரன்கள் எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. சென்னை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மீண்டும் முதலிடத்தில்..
10-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 8-வது வெற்றியாகும். இதன் மூலம் 16 புள்ளிகளுடன், புள்ளி பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சாதனை சென்னை
ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் லீக் சுற்றை தாண்டி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டும் தான். இதில் இரண்டு முறை சாம்பியன், மூன்று முறை 2-வது இடம் ஆகியவையும் அடங்கும்.


Click it and Unblock the Notifications











