அபுதாபி: 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் கொண்டாட்டம் அபுதாபியில் இன்று தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முழுமையாக இந்தியாவில் நடத்த முடியவில்லை.
முதல் 20 ஆட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய இடங்களிலும், எஞ்சிய ஆட்டங்களை மே 2-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை இந்திய நகரங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னை- மும்பை இந்தியன்ஸ் மோதல்
இதன்படி 7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அபுதாபியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர், ஹைதராபாத் சன் ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்கின்றன.
லீக் போட்டிகள்..
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் என்ற அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைக்கும்.
ரோகித்- காம்பீர்
இன்றைய தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸும், 2012-ம் ஆண்டு சாம்பியனான கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸூம் மோதுகின்றன.
தொடரும் டெண்டுல்கர்
கடந்த ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் 'அடையாளம்' என்ற சிறப்பு அந்தஸ்துடன் அந்த அணியில் தொடருகிறார். வீரர்களுக்கு பல்வேறு யுக்திகளை கற்று கொடுத்து வரும் அவர், நேற்றைய பயிற்சியின் போது சிறிது நேரம் பேட்டிங் செய்தார்.