
ரஹானே, அபிஷேக் அவுட்
டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த ரஹானே 13 ரன்களிலும் அபிஷேக் நாயர் 23 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

வாட்சன், சாம்சன் அதிரடி
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சனும், கேப்டன் ஷேன் வாட்சனும் ஜோடி சேர்ந்து, பஞ்சாப் பவுலர்களை மிரள வைத்தனர். இவர்கள் 3-வது விக்கெட்டுக்கு 7 ஓவர்களில் 74 ரன்கள் குவித்தனர். 12 ரன்னில் கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த வாட்சன் 50 ரன்களில் கிளீன் போல்டு ஆனார். பினன்ர் வந்த ஸ்டூவர்ட் பின்னி 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

192 ரன்கள் இலக்கு
இதைத் தொடர்ந்து இறுதி ஆட்டத்தில் ஸ்டீவன் சுமித் அணியின் ஸ்கோரை மேலும் வலுப்படுத்தினார். பாலாஜியின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஓடவிட்ட அவர் 27 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

தொடக்கம் சரிவு
பின்னர் 192 ரன்கள் இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் 2 ரன்கள்,. விருத்திமான் சஹா 2 ரன்களில் அவுட் ஆகினர்.

மேக்ஸ்வெல் அபாரம்
3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கிளைன் மேக்ஸ்வெல்ஸ் ராஜஸ்தான் பவுலர்களுக்கு பதிலடி கொடுத்தார். அதிரடி காட்ட முடியாமல் தவித்த இன்னொரு தொடக்க வீரர் புஜாரா மேக்ஸ்வெல்லுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
மேக்ஸ்வெல் எந்த பவுலரையும் விட்டுவைக்கவில்லை. அனைவரையும் வெளுத்து வாங்கினார். குல்கர்னியின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி, ரஜத் பாட்டியாவின் ஓவரில் தொடர்ந்து 2 சிக்சர் என்று அதகளப்படுத்தினார். அந்த அணியின் ஸ்கோர் 126 ரன்களாக உயர்ந்த போது மேக்ஸ்வெல் 89 ரன்களில் அவுட் ஆனார்.

விடாத மில்லர் மழை
அடுத்து வந்த டேவிட் மில்லர், மேக்ஸ்வெல் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்தார். 18-வது ஓவரை வீசிய தவால் குல்கர்னியின் ஒரே ஓவரில் மில்லர் 4 சிக்சர்களை பறக்க விட்டு, ராஜஸ்தானின் நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக சிதைத்தார். இதைத் தொடர்ந்து 19-வது ஓவரில் சிக்சருடன் இன்னிங்சை நிறைவு செய்தார்.

7 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி
பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புஜாரா 40 ரன்களுடனும் மில்லர் 51 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2வது வெற்றி
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். ஏற்கனவே சென்னை அணியை வீழ்த்தி இருந்தது. அந்த ஆட்டத்தில் சென்னை அணி 205 ரன்கள் எடுத்த போதிலும், இதே மேக்ஸ்வெல்-மில்லர் கூட்டணி தான் ‘செக்' வைத்தது. இவர்களே இப்போது ராஜஸ்தானுக்கும் ‘வேட்டு' வைத்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











