அபுதாபி: 7வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 4வது போட்டியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பரபரப்பான வெற்றியை பெற்றது.
7வது ஐ.பி.எல். போட்டியில் நேற்று இரவு அபுதாபியில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன், முதலில் ஹைதராபாத்தை பேட் செய்ய கேட்டுக் கொண்டார்.

பேட்டிங்கை தொடங்கிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்களால் ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியவில்லை.
பிஞ்ச், டேர்னர் தடுமாற்றம்
அந்த அணியின் ஆரோன் பிஞ்ச் 2 ரன்னில் அவுட் ஆனார். அதேபோல் டேவிட் டேர்னர் கூட 35 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
38 ரன்கள் எடுத்த தவான்
முன்னதாக கேப்டன் ஷிகர் தவான் 38 ரன்களில் ஆட்டம் இழந்தார். கடைசி கட்டத்தில் ரன்களை அதிகரிக்க ஹைதராபாத் அணி பகீரத முயற்சி மேற்கொண்டது.
133 ரன்களே
ஆனால் அது முடியவில்லை. 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
குல்கர்னி, பாட்டியா தலா 2 விக்கெட்டுகள்
ராஜஸ்தான் அணியின் தவால் குல்கர்னி, கனே ரிச்சர்ட்சன், ரஜத் பாட்டியா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடக்கத்தில் தடுமாறிய ராஜஸ்தானி
அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 31 ரன்னுக்குள் அபிஷேக் நாயர். சஞ்சு சாம்சன் , கேப்டன் வாட்சன் ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.
மீட்ட பின்னி- ரஹானே ஜோடி
இதன் பின்னர் ஸ்டூவர்ட் பின்னியும், ரஹானேவும் அணியை சிக்கலில் இருந்து மீட்டனர். ரஹானே 59 ரன்களில் வெளியேறிய நிலையில் மேலும் இரு விக்கெட் அடுத்தடுத்து சரிந்தது.
பரபர கடைசி ஓவர்
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. புவனேஷ்வர்குமார் வீசிய 20-வது ஓவரில் பவுல்க்னெர் தொடர்ந்து 2 பவுண்டரி விரட்டியடித்து ராஜஸ்தானுக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார். ஸ்டூவர்ட் பின்னி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.