பெங்களூர்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தனது கடைசி லீக்கில் இன்று மாலை பெங்களூர் ராயல் சேலஞ்சர்சை சந்திக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விப்பயணத்திற்கு முடிவு கட்டுமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
7-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் இன்னும் 4 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்சும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை நேருக்கு நேர் சந்திக்கின்றன.

சென்னை பிளே-ஆப் சுற்றை உறுதி செய்து விட்ட அணி. பெங்களூர் அடுத்த சுற்று வாய்ப்பை பறிகொடுத்து விட்ட அணி. இதனால் இன்றைய ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் சென்னை அணிக்கு இது முக்கியமான ஒன்றாகும்.
பிளே ஆப் சுற்று
ஏனெனில் 'பிளே-ஆப்' சுற்றில், புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களை வகிக்கும் அணிகளுக்கே இறுதிப்போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்பு உண்டு.
'பிளே-ஆப்' சுற்றில் மொத்தம் 4 அணிகள் விளையாடும். இதில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டியை எட்டும்.
அடுத்து புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 'வெளியேற்றுதல்' சுற்றில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணியும், முதலாவது தகுதி சுற்றில் தோற்கும் அணியும் 2-வது தகுதி சுற்றில் மோதும். இதில் வெற்றி காணும் அணி, 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள அணிகளுக்கு இறுதிசுற்று அதிர்ஷ்டத்தை தட்டிச்செல்ல இரு வாய்ப்புகள் கிடைக்கும்.
தோல்வியைடைந்து வரும் சென்னை
ஆரம்பத்தில் அட்டகாசப்படுத்திய சென்னை அணி கடந்த சில ஆட்டங்களில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் ஒருங்கிணைந்து செயல்படாமல் சொதப்பிக் கொண்டிருக்கிறது. கடைசியாக ஆடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியதால் சென்னை அணி முதல் இரு இடங்களில் ஒன்றாக தொடர்ந்து நீடிக்குமா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
இன்றைய ஆட்டத்தில் நல்ல ரன்ரேட்டுடன் வெற்றி பெறும் பட்சத்தில் 2-வது இடத்தை தக்க வைத்துக் கொள்ள பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதை உணர்ந்து கேப்டன் டோணி, சுரேஷ் ரெய்னா, வெய்ன் சுமித், பாப் டு பிளிஸ்சிஸ், ரவீந்திரஜடேஜா, அஸ்வின் உள்ளிட்ட சென்னை முன்னணி வீரர்கள் லாவகமாக செயல்பட வேண்டியது அவசியம்.
கிறிஸ் கெய்ல், கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ், யுவராஜ்சிங் என்று தலைசிறந்த வீரர்களை கொண்ட அணி என்று வர்ணிக்கப்பட்ட பெங்களூர் ராயல் சேலஞ்சர்சின் பாச்சா இந்த முறையும் புஷ்வாணமாக போய் விட்டது. 13 ஆட்டங்களில் 5-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூர் சொந்த மண்ணில் ஆறுதல் வெற்றியுடன் விடைபெற விரும்பும்.