சென்னை: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியுள்ளது. வரும் 6ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வருகிற 8ஆம்தேதி முதல் மே 24ஆம்தேதி வரை நடக்கிறது. இந்தியாவின் 12 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட எட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், மொகாலி, அகமதாபாத், ஹைதராபாத், புனே, ராய்ப்பூர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இந்தப்போட்டி நடக்கிறது.

சென்னையில் போட்டி
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 'லீக்' ஆட்டம் நடக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9ஆம்தேதி டெல்லி டேர்டெவில்சுடனும் (இரவு 8 மணி), 11ஆம்தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடனும் (மாலை 4 மணி), 25ஆம்தேதி கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடனும் (இரவு 8 மணி), 28ஆம்தேதி கொல்கத்தா நைட்ரைடர்சுடனும் (இரவு 8 மணிக்கு), மே 4ஆம்தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் (மாலை 4 மணி), மே 8ஆம்தேதி மும்பை இந்தியன்சுடனும் (இரவு 8 மணி), மே 10ஆம்தேதி ராஜஸ்தானுடனும் (இரவு 8 மணி) சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன.
6ஆம் தேதி டிக்கெட் விற்பனை
சென்னையில் நடைபெறும் முதல் 2 போட்டிக்கான (9 மற்றும் 11ஆம் தேதி ஆட்டம்) டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 6ஆம்தேதி தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.
ஆன்லைனிலும் விற்பனை
இதற்கிடையே சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. in.bookmyshow.com என்ற இணைய தளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.
ஆன்லைனில் ரூ.1,500 (சி.டி,இ,எப்,ஜி மற்றும் எச் ஸ்டாண்டு மேல்பகுதி), ரூ.2,500 (டி3), ரூ.3 ஆயிரம் (சி,டி,இ ஹாஸ்பிட்டாலிட்டி பாக்ஸ் லெவல் 3 மற்றும் எச் பாக்ஸ் லெவல் 2), ரூ.4 ஆயிரம் (பெவிலியன் டெரஸ் மற்றும் டெரஸ் 2), ரூ.6 ஆயிரம் (அண்ணா பெவிலியன்) ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இலங்கை வீரர்கள்
சென்னையில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் ஆடுவதற்காக தடை தொடர்ந்து நீடிக்கிறது. இலங்கை வீரர்களை சென்னையில் விளையாட அனுமதிக்க இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவிடம் தெரிவித்துவிட்டது.
மேத்யூஸ் (டெல்லி), பெரைரா (பஞ்சாப்), மலிங்கா (மும்பை) ஆகிய 3 இலங்கை வீரர்கள் இந்த முறை ஐ.பி.எல். தொடரில் ஆடுகிறார்கள். அவர்கள் சென்னையில் நடைபெறும் போட்டியில் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.