2020 ஐபிஎல் ஏலம்
2020 ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்றது. 338 வீரர்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில், எட்டு அணிகளும் சுமார் 140 கோடி ரூபாய்க்கு வீரர்களை வாங்கினர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஏலத்தில் 14.60 கோடி கையிருப்புடன் கலந்து கொண்டது.
4 வீரர்கள்
சிஎஸ்கே அணி சாம் கர்ரன் - 5.50 கோடி, பியுஷ் சாவ்லா - 6.75 கோடி, ஜோஷ் ஹேசல்வுட் - 2 கோடி, சாய் கிஷோர் - 20 லட்சம் ஆகியோரை ஏலத்தில் வாங்கியது. இவர்களில் சாம் கர்ரன் மற்றும் ஹேசல்வுட் ஆகிய இருவரும் சிறந்த தேர்வாக அமைந்தது.
பியுஷ் சாவ்லா ஏலத் தொகை
எனினும், சுழற் பந்துவீச்சாளர் பியுஷ் சாவ்லாவை 6.75 கோடி என்ற அதிக தொகைக்கு ஏலம் எடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் 4.20 கோடிக்கு அவரை தன் அணியில் வைத்திருந்தது. இந்த சீசனில் அவரை விடுவித்து இருந்தது.
அதிக வயது
இன்னும் சில நாட்களில் 31 வயதாக இருக்கும் பியுஷ் சாவ்லாவை ஏன் சிஎஸ்கே அணி வாங்கியது? அதுவும் அவருக்கு கொடுக்கப்பட்ட 6.75 கோடி விலையானது இந்த ஆண்டுக்கான ஏலத்தில் ஒரு இந்திய வீரருக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச விலையாகும்.
ரசிகர்கள் விமர்சனம்
சிஎஸ்கே ரசிகர்களே இந்த தேர்வை இணையத்தில் விமர்சனம் செய்து வந்தனர். சிஎஸ்கே அணி இன்னும் 30 வயதுக்கும் மேற்பட்டோர் அணியாகவே உள்ளது என விமர்சனம் செய்தனர். மேலும், சிஎஸ்கே அணியின் ஏற்கனவே நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில், ஐந்தாவதாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் தேவையா? என்ற கேள்வியும் எழுந்தது.
வலம் வந்த கிசுகிசு
இதனிடையே பியுஷ் சாவ்லாவை தேர்வு செய்ய சொன்னது தோனி தான் என்ற கிசுகிசு கிளம்பியது. தோனி 2007 மற்றும் 2011 உலகக்கோப்பை வெற்றியின் போது பியுஷ் சாவ்லாவை இந்திய உத்தேச அணியில் வைத்திருந்தார். அதனால், தான் அவரை ஏலத்தில் எடுக்குமாறு கூறி இருக்கிறார் என்ற பேச்சு கிளம்பியது.
பிளெம்மிங் என்ன சொன்னார்?
இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், தோனி, பியுஷ் சாவ்லாவுடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறார் என அவரை அதிக விலை கொடுத்து வாங்கிய ரகசியத்தை கூறினார். இதை பிளெம்மிங் இத்தனை வெளிப்படையாக கூறுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
நல்ல பழக்கத்தில் இருக்கிறார்
பிளெம்மிங் கூறுகையில், "பியுஷ்-ஐ நாங்கள் அதிகமாக மதிப்பிடுகிறோம். கேப்டன் (தோனி) அவருடன் நல்ல பழக்கத்தில் இருக்கிறார். அவர் சிறந்த லெக் ஸ்பின்னராக தன்னை நிரூபித்துள்ளார். எங்கள் சொந்த மைதானத்தில் நாங்கள் எப்போதுமே சுழற் பந்துவீச்சையே முக்கியமாக கருதுவோம். அதிக சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பது மோசமான விஷயமல்ல" என்றார்.
என்ன விலை கொடுத்தும்..
எவ்வளவு விலை கொடுத்தும் பியுஷ் சாவ்லாவை வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் சிஎஸ்கே அணி அவரை 6.75 கோடி விலை கொடுத்து வாங்கியதாக தெரிகிறது. தோனி என்ன திட்டம் வைத்துள்ளார்?