பெங்களூரு: ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி வீரர்களை வாங்கி குவித்தது. ஏலத்தின் தொடக்கத்தில் சென்னை மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
ஆனால், நாங்கள் ஏன் அமைதி காத்தோம் என்று இப்போது தெரிகிறதா என்று சென்னை அணி யோசிக்க வைத்துவிட்டது.
முதலில் சீனியர்களை குறிவைத்து எடுத்த சென்னை அணி, பிற்பாதியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக செயல்பட்டது.

சென்னை அணி அண்டர் 19 ஆல் ரவுண்டர் ராஜவர்த்தனேவை தேர்வு செய்து கலக்கியது. இதே போன்று தேஷ்பாண்டே, சிவம் துபே, சேனாபதி, முக்கேஷ் சௌத்ரி, பிரசாந்த் சோலங்கி, பகத் வர்மா,சிம்ரஜித் சிங் போன்ற இளம் வீரர்களை தேர்வு செய்தது.
ஆனால் தமிழகத்தை மையமாக வைத்து செயல்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் தமிழக வீரர்களை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதற்கு ஏற்றார் போல் அஸ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், ஷாரூக்கான் உள்ளிட்ட வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்காமல் தவறவிட்டது.
இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் முருகன் அஸ்வின், சாய் கிஷோர், சித்தார்த் ஆகியோரும் சென்னை அணி ஏலத்தில் எடுக்கவில்லை. இந்த நிலையில், கோவையை சேர்ந்த சென்னை அணிக்காக ஏற்கனவே விளையாடிய ஹரி நிஷாந்த், ஜெகதீசன் ஆகியோரை சென்னை அணி கடைசியாக தேர்வு செய்தது. இவ்விருவரும் நல்ல அதிரடி பேட்ஸ்மேன்கள். ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது கொஞ்சம் சந்தேகம் தான்.