துபாய் : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான மினி ஏலம் நாளை டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 77 வீரர்களுக்கான இடம் தேர்வு செய்யப்படுகிறது. இதில் 30 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.
இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஆக சிஎஸ்கே அணி களமிறங்க உள்ளது. சிஎஸ்கே அணியில் பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டிருப்பதால் 16 கோடியே 25 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கிறது. இதேபோன்று அம்பத்தி ராயுடு சென்றிருப்பதால் மேலும் ஒரு ஆறு கோடி சிஎஸ்கேவுக்கு கிடைத்திருக்கிறது.

இதனால் வரும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி 31 கோடியே 40 லட்சம் ரூபாயுடன் களம் இறங்குகிறது. இது சிஎஸ்கே அணி மூன்று வெளிநாட்டு வீரர்கள் உட்பட ஆறு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஒரு குறை என்றால் அது வேகப்பந்துவீச்சு தான். கடந்த சீசனில் இலங்கை வீரர் மதிஷா பதிராணாவை வைத்து சிஎஸ்கே சமாளித்து விட்டது.
ஆனால் அவரை மட்டும் நம்புவது சரி கிடையாது. இதனால் சிஎஸ்கே அணி தங்களுக்கு இருக்கும் பணத்தை வைத்துக்கொண்டு இரண்டு வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களை வாங்க வேண்டும். அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக ஏற்கனவே விளையாடிய ஜோஸ் ஹேசல்வுட் சிஎஸ்கேவுக்கு நல்ல வீரராக திகழ்வார். ஏனென்றால் ஹேசல்வுட் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அனுபவம் உடையவர்.
அவரை ஆர் சி பி அணி ஏன் விட்டது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. இதேபோன்று சிஎஸ்கே அணி தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோயிட்சேவை மினி ஏலத்தில் குறி வைத்து வாங்க வாய்ப்பு உள்ளது. இவர் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிருக்கிறார். அதிவேகமாக பந்து வீசி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் ஜெரால்ட் கோயிட்சேவை சிஎஸ்கே அணி குறி வைத்து வாங்கலாம்.
இதேபோன்று ஆல்ரவுண்டர் சர்துல் தாக்கூரை சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் குறி வைக்கலாம். சர்துல் தாக்கூர் ஏற்கனவே சிஎஸ்கே அணிக்காக விளையாடிய வீரர். பேட்டிங்கிலும் கை கொடுப்பார் என்பதால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதேபோன்று வேகப்பந்து வீச்சாளர் சிவம் மவி போன்ற வீரர்களை சிஎஸ்கே குறி வைக்கலாம்.