பெங்களூரு : ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி அணி மிகவும் மோசமாக செயல்பட்டு இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வாங்காத ஸ்டார் அணி என்றால் அது ஆர்சிபி தான்.
சிஎஸ்கே, மும்பைக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட ஆர் சி பி அணியில் விராட் கோலி போன்ற ஸ்டார் வீரர்கள் இருந்தும் அந்த அணியால் வெற்றி கோப்பை அருகே கூட வரமுடியவில்லை. இந்த நிலையில் மினி ஏலத்திற்கு முன்பு ஆர்சிபி அணி தங்களிடம் இருந்த ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹேசல் வுட் போன்ற வீரர்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டது.

இதனால் யாரை அவர்கள் வாங்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ஆர்சிபி அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப்பை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். இதேபோன்று யாஷ் தாக்கூரை 5 கோடி ரூபாய் கொடுத்தும் வாங்கியுள்ளனர். ஏலத்திற்கு முன்பு அவர்கள் கேமரான் கிரீனை மும்பை இடம் இருந்து டிரான்ஸ்பர் செய்து இருக்கிறார்கள்.
இந்த நிலையில் பெங்களூரு சின்னசாமி போன்ற ரன் குவிப்புக்கு சாதகமான மைதானத்தில் ஆர்சிபி அணி மோசமான வேக பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கி இருப்பதாக ரசிகர்கள் சாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஐபிஎல் மினி ஏலம் தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ளார். அப்போது அதில் பங்கேற்ற கிரிக்கெட் வல்லுனர் பிரசன்னா ஆர் சி பி அணியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார்.
ஆர் சி பி அணி தங்களுக்கு தேவையான பவுலர்களை வாங்கி விட்டதாக அஸ்வின் கூறிய நிலையில் அதற்கு பதிலடி கொடுத்துள்ள பிரசன்னா, சிறு வயதில் அனைவருமே ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ய ஆசைப்படுவோம். ஆனால் அனைவராலும் ஐஸ்வர்யா திருமணம் செய்ய முடியாது. இதனால் தமக்கு கிடைத்த பெண்ணையே ஐஸ்வர்யா ராய் நீதாண்டி என்று நினைத்து நாம் வாழ்வோம்.
அதேபோல்தான் ஆர்சிபி அணிக்கு எந்த ஒரு பவுலரும் கிடைக்கவில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் நாங்கள் நினைத்த வீரர்களை வாங்கி விட்டோம் என்று கூறலாம். கொஞ்சம் கூட நியாயமே இல்லாமல் ஆர்சிபி அணி வேகப்பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்கள் எடுத்த பவுலர்கள் எல்லாம் அடிப்படை விலையில் கிடைத்த வீரர்கள் ஆர் சி பி கேட்ட வீரர்களை யாருமே கொஞ்சம் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
எந்த வித போட்டியும் இல்லாத வீரர்களை நான் ஆர்.சி.பி தேடி தேடி எடுத்து இருக்கிறது. ஆட்டோக்காரர்கள் மீட்டருக்கு மேல் 50 ரூபாய் கொடுங்கள் என்று கூறுவது போல் ஆர் சி பி எடுத்து இருக்கும் அனைத்து வீரர்களுமே நான்கு ஓவர்களுக்கு 50 ரன்கள் கொடுக்கக்கூடியவர்கள். மிகவும் மோசமான தேர்வு என்று பிரசன்னா ஆர்சிபி அணியை கடுமையாக சாடி இருக்கிறார். அஸ்வின் மற்றும் பிரசன்னாவின் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது .