துபாய் : ஐபிஎல் மினி ஏலத்தில் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலையை கொண்ட சமீர் ரிஸ்வி என்ற வீரரை 8 கோடியே 40 லட்சம் ரூபாய் கொடுத்து சிஎஸ்கே தட்டி தூக்கி இருக்கிறது. 20 வயதான வீரரை இவ்வளவு பணம் கொடுத்து சிஎஸ்கே வாங்கி இருக்கிறது என்றால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனமும் அந்த வீரரை நோக்கி தான் சென்றிருக்கிறது.
அதுவும் இவர் ரஞ்சிப் போட்டியில் வெறும் இரண்டு ஆட்டங்களில் தான் விளையாடி இருக்கிறார். அப்படி இருக்க என்ன ஸ்பெஷல் இவரிடம் இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். அதற்கான காரணத்தை தற்போது நாங்கள் கூறுகிறோம்.

உத்திரபிரதேசத்தில் டி20 லீக் போட்டி நடைபெற்றது. டிஎன்பிஎல் போல் நடைபெற்ற இந்த தொடரில் கான்பூர் சூப்பர் ஸ்டார் அணிக்காக விளையாடிய சமீர் ரிஸ்வி அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். அந்தத் தொடரில் அவர் இரண்டு சதம் அடித்து ஒன்பது இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்திருக்கிறார். இதனை பார்த்து அவரை மூன்று அணிகள் சோதனைக்காக அழைத்து இருக்கிறது.
ஆனால் அப்போது 23 வயது உட்பட்டவர்களுக்கான உத்தரபிரதேச அணியின் தேர்வு நடைபெற்றது. இதில் ரிஸ்வி பங்கேற்றதால் பஞ்சாப் அணி அழைத்த போது அவரால் செல்ல முடியவில்லை. 23 வயதுக்குட்பட்டவர்களுக்கான முதல் ஒருநாள் போட்டியில் உத்தரபிரதேச அணி சார்பாக விளையாடிய சமீர் ரிஸ்வி ராஜஸ்தானுக்கு எதிராக 65 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதேபோன்று அந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் 50 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.
அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சமீர் ரிஸ்வி பெற்றார். இதன்மூலம் சமீர் ரிஸ்வி அனைத்து ஐபிஎல் அணிகளின் கவனத்தையும் ஈர்த்தார். சமீர் ரிஸ்விக்கு சுழல் பந்து வீசவும் தெரியும். சுரேஷ் ரெய்னா சமீர் குறித்து சிஎஸ்கே அணியிடம் தெரிவித்திருக்கலாம்.வெறும் இருபது வயதான வீரரை தற்போது ஏலத்தில் எடுத்து அடுத்த பத்து வருடத்திற்கு இவரை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்து. ராயுடுக்கு பதில் அனுபவ வீரரை தேடாமல் சிஎஸ்கே அணி இளம் வீரர்களை நோக்கி சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.