மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் தற்போது விறுவிறுப்பாக நடந்து முடிவடைந்து இருக்கிறது. இந்த ஏலத்தில் அதிகப்படியாக ரிஷப் பன்ட் 27 கோடி ரூபாய்க்கு சென்ற ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்த சூழலில் கடந்த ஏலங்களில் நடைபெற்ற ஒரு தவறு தற்போது சரி செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் மிட்செல் ஸ்டார்க்கின் சம்பளம் 24 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு சம்பளம் வழங்கப்பட்டது.

இதேபோன்று ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் 20 கோடி ரூபாய்க்கு சம்பளம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்திய வீரர்களை விட ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிக சம்பளம் வாங்குவதாக பலரும் குற்றச்சாட்டினர். மினி ஏலத்தில் மட்டும் பங்கேற்பதன் மூலம் வெளிநாட்டு வீரர்கள் அதிக சம்பளம் வாங்குவதாகவும் புகார் எழுந்தது.
இந்த நிலையில் பி சி சி ஐ ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது. அதன்படி மெகா ஏலத்தில் பெயர் கொடுத்தால் மட்டுமே அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என்று விதியை மாற்றியது. இதன் மூலம் பல வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் தங்களுடைய பெயரைக் கொடுத்தனர். இந்த நிலையில் மெகா ஏலத்தில் அதிகபட்சமாகவே ஜாஸ் பட்லர் 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு தான் சென்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, பல காலமாக ஐபிஎல் ஏலத்தில் நடந்த தவறு தற்போது சரி செய்யப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்காமல் மினி ஏலத்தில் மட்டும் பங்கேற்றனர். மினி ஏலத்தில் ஸ்டார் இந்திய வீரர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்டு வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று அதிக ஊதியத்தை பெற்றனர்.
பிசிசிஐ தற்போது விதியை மாற்றியது மூலம் அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்களுக்கு 15 கோடியே 75 லட்சம் ரூபாய் தான் கிடைத்திருக்கிறது. கடந்த முறை 25 கோடி வாங்கிய வீரர்கள் எல்லாம் இம்முறை 7 கோடி ரூபாய்க்கு தான் ஏலம் போகிறார்கள். மெகா ஏலத்தில் பங்கேற்றால் மட்டுமே வீரர்களின் உண்மையான மதிப்பு தெரியவரும். அதே போல் இந்திய அணிக்காக விளையாடப்படாத வீரர்கள் எல்லாம் கடந்த மினி ஏலத்தில் அதிக சம்பளம் பெற்று வந்தனர். தற்போது அவர்களுடைய சம்பளமும் குறைந்து இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடாத வீரரின் சம்பளம் இம்முறை அதிகபட்சமாகவே 6 கோடி ரூபாய் தான் சென்றிருக்கிறது. இதுவும் நான் ஒரு சரியான விஷயமாக பார்க்கிறேன் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.