மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரை கடைசி நிமிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. அவரை முதல் சுற்றில் வாங்காமல் வேடிக்கை பார்த்து விட்டு கடைசி சில நிமிடங்களில் அவரது பெயரை விருப்பப் பட்டியலில் அளித்து, அதன் பின் வாங்கியது மும்பை இந்தியன்ஸ். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
கிரிக்கெட் உலகின் கடவுள் என்ன வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் வேகப் பந்துவீச்சாளராக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். அர்ஜுன் டெண்டுல்கர் கோவா மாநில அணிக்காக விளையாடி வருகிறார். பந்துவீச்சில் அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் அவரால் கிரிக்கெட்டில் பெரிய வளர்ச்சியை அடைய முடியவில்லை. எனினும், ஐபிஎல் தொடரில் கடந்த 2020 முதல் இடம் பெற்று வருகிறார். அப்போது அவரை மும்பை இந்தியன்ஸ் அணி அவரது அடிப்படை விலையில் மட்டுமே வாங்கி இருந்தது.

சச்சின் டெண்டுல்கர், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக இருப்பதாலேயே அர்ஜுன் டெண்டுல்கர் வாங்கப்பட்டு இருக்கிறார் என அப்போது விமர்சனம் எழுந்தது. மும்பை இந்தியன்ஸ் வலுக்கட்டாயமாக அர்ஜுன் டெண்டுல்கரை வாங்கி இருக்கிறது என்ற விமர்சனமும் இருந்தது. அவர் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தி இருக்கிறார்.
அதனால், அவரை இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்காது என்ற எண்ணமே பலருக்கும் இருந்தது. மேலும், ஏலத்திற்கு முந்தைய தினம் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை பதிவு செய்து இருந்தார்.
அதனால், எந்த அணியுமே அவரை ஏலத்தில் வாங்க முயற்சிக்காது என்ற கருத்து நிலவியது. இதற்கிடையே ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் முதல் முறையாக அறிவிக்கப்பட்ட போது மும்பை இந்தியன்ஸ் அணி அவரை வாங்க ஆர்வம் காட்டவில்லை. அப்போது அணிகளின் விருப்பப் பட்டியலில் உள்ள வீரர்கள் மட்டுமே ஏலத்தில் அறிவிக்கப்பட்டு வந்தனர். அப்போதுதான் அதில் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் முதன்முறை அறிவிக்கப்பட்டது. நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணிதான் அவரை விருப்பப் பட்டியலில் அளித்து இருக்க வேண்டும்.
ஆனால், மும்பை இந்தியன்ஸ் முதல்முறை அவரை வாங்கவில்லை. அதன் பின்பு இரண்டாம் முறையாக ஒவ்வொரு அணியும் விருப்பப்பட்ட வீரர்கள் பெயர்களை அளிக்கலாம் என கூறப்பட்டது. அப்போது மீண்டும் அர்ஜுன் டெண்டுல்கரின் பெயர் ஏலத்தில் இடம் பெற்றது. அப்போதுதான் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஆனந்த் அம்பானி மற்றும் நீதா அம்பானி, அர்ஜுன் டெண்டுல்கரை வாங்க முடிவு செய்தனர்.
அவரது அடிப்படை விலையான 30 லட்சத்துக்கு அர்ஜுன் டெண்டுல்கர் வாங்கப்பட்டார். அவரை முதன்முறை அறிவிக்கப்பட்ட போதே வாங்காமல் கடைசி நிமிடம் வரை இழுத்தடித்து வாங்கியது ஏன்? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து உள்ளது. இதன் மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி "அர்ஜுனுக்கு அவ்வளவுதான் மதிப்பு" என்பதை சொல்லாமல் சொல்கிறார்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
அதே சமயம் அர்ஜுன் டெண்டுல்கரை பலரும் கேலியும், கிண்டலும் செய்து வருகிறார்கள். "கிரிக்கெட் கடவுளின் (சச்சின்) மகனுக்கு ஒரு ஆண்டுக்கான பாக்கெட் மணி அளிக்கப்பட்டு விட்டது." என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்படுகிறது. ஏனெனில், அவர் ஐபிஎல் போட்டிகளில் எப்படியும் விளையாட மாட்டார். இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்படும் சம்பளம் அவருக்கான பாக்கெட் மணி என கேலி செய்து உள்ளனர்.