மும்பை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ரூ.110.5 கோடி பர்ஸ் தொகையுடன் மெகா ஏலத்தில் பங்கேற்ற பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயரை வாங்க ரூ.26.75 கோடியும், அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு ஆர்டிஎம் மூலமாகவும் வாங்கியது. அதேபோல் சாஹல் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டார்.
3 இந்திய வீரர்களை வாங்குவதற்கே பாதி தொகையை பஞ்சாப் அணி நிர்வாகம் செலவு செய்தது. அதிலும் மெகா ஏலத்தில் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு ஆர்டிஎம் மூலம் வாங்குவதற்கு பதிலாக, முன்னதாகவே அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.16 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கலாம் என்று சில விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், அர்ஷ்தீப் சிங் கட்டாயம் வேண்டுமென்றால் அவரை ரூ.18 கோடிக்கு ரீடெய்ன் செய்திருக்கலாம். ஏனென்றால் தொடக்கம் முதலே அர்ஷ்தீப் சிங் நிச்சயம் வேண்டும் என்பதில் பஞ்சாப் அணி தெளிவாக இருந்தது. அதேபோல் அவரும் பஞ்சாபி வீரர் என்பதால், பஞ்சாப் அணியிலேயே மெகா ஏலத்திற்கு வராமல் தொடர்ந்திருக்கலாம்.
தற்போது இந்திய கிரிக்கெட்டில் புதிய பந்து மற்றும் பழைய பந்தில் பும்ராவுக்கு பின் கன்சிஸ்டன்சியுடன் விக்கெட்டுகளை வீழ்த்துவது அர்ஷ்தீப் சிங் தான். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், பும்ராவை விடவும் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். சில நேரங்களில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்தாலும், அவர் மிகச்சிறந்த விக்கெட் டேக்கர் என்பதில் மாற்று கருத்தில்லை.
சாஹலை பொறுத்தவரை மெகா ஏலத்தில் அவரின் விலை அதிகரித்து கொண்டே சென்றது. வழக்கமாக ஸ்பின்னர்கள் அதிக தொகைக்கு செல்ல மாட்டார்கள். ரஷீத் கான் போல் சில நேரங்களில் அவர்களுக்கு நல்ல தொகை கிடைக்கும். ஆனால் இம்முறை இந்திய லெக் ஸ்பின்னரில் ஒருவரான சாஹல் ரூ.18 கோடிக்கு வாங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் மிகச்சிறந்த விக்கெட் டேக்கர் என்பதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
அதேபோல் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் பொறுப்பேற்ற பின் பலரும் ரிஷப் பண்ட் தான் அந்த அணிக்கு செல்வார் என்று நினைத்திருந்தனர். ஆனால் பாண்டிங் அதனை செயல்படுத்தவில்லை. தொடக்கத்தில் இருந்தே ஸ்ரேயாஸ் ஐயர் தான் தங்களின் இலக்கு என்பதில் கவனமாக இருந்தனர். அவருக்காக சில கோடிகளை கூடுதலாக கொடுத்திருந்தாலும், கேப்டன் என்ற முறையில் தவறு கிடையாது.
இதனால் பஞ்சாப் அணி இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. இருந்தாலும் பஞ்சாப் அணி தங்களின் பிளேயிங் லெவனை எப்படி கட்டமைக்கிறது, வீரர்களின் ஃபார்ம், முல்லன்பூர் மைதானத்தில் அவர்களால் ரன்கள் குவிக்க முடிகிறதா என்பதை பொறுத்தே பஞ்சாப் அணியின் கனவு நிறைவேறும் என்று கூறியுள்ளார்.