மும்பை: உலகின் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக இருக்கும் பும்ரா ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்று இருந்தால் ஐபிஎல் அணிகள் 520 கோடி ரூபாய் வைத்திருந்தாலும் அவரை வாங்க அது போதாது என ஆஷிஷ் நெஹ்ரா கூறி இருக்கிறார். பும்ரா சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அணியின் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு வெற்றி தேடி வந்தார்.
அதை பற்றி பேசுகையில் ஆஷிஷ் நெஹ்ரா பும்ராவின் மதிப்பை பற்றி உயர்வாக பேசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை. அவர் விடுப்பு எடுத்ததால் அணியின் துணை கேப்டன் பும்ரா தற்காலிகமாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வெற்றி தேடித் தந்தார்.

இந்திய அணி ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக நியூஸிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்திருந்தது. அந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இந்திய அணி எப்படி செயல்பட போகிறது? என்ற கவலை இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.
ஆனால், பும்ரா கேப்டன் ஆகவும், தனிப்பட்ட முறையில் வேகப் பந்துவீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் முதல் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும், கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
அது பற்றி பேசிய ஆஷிஷ் நெஹ்ரா, "பும்ரா இதற்கு முன் இது போன்ற செயல்பாட்டை பலமுறை செய்திருக்கிறார். ரோஹித் சர்மா அணியில் இல்லை. இந்த நிலையில் அணியை வழிநடத்தி முதல் போட்டியில் கடும் அழுத்தத்திற்கு நடுவே சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார் பும்ரா. அந்த அழுத்தத்தை அவர் சரியாக கையாண்டு இருக்கிறார்." என்றார்.
மேலும், "நியூசிலாந்து அணிக்கு எதிராக 0 - 3 என இந்திய அணி ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்த பிறகு பும்ரா இந்த முறையில் இந்திய அணியை வழிநடத்தியது அபாரமாக இருந்தது. பும்ராவை உங்களால் வீழ்த்தவே முடியாது. பும்ரா ஏலத்தில் பங்கேற்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். ஒரு ஐபிஎல் அணியிடம் 520 கோடிகள் இருந்தாலும் கூட அவரை வாங்க போதாது." என்றார் நெஹ்ரா.