ஜெட்டா : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் தற்போது விறுவிறுப்பாக தொடங்கி நடைபெற்று இருக்கிறது. இந்த ஏலத்தில் முதல் ரவுண்டு முடிவடைந்த நிலையில் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.
இந்த மெகா ஏலத்தை மல்லிகா சாகர் என்ற பெண் நடத்தி வருகிறார். கடந்த முறை நடைபெற்ற மினி ஏலத்தில் இவர் சிறப்பாக செயல்பட்டார் என்பதால் மீண்டும் அவருக்கு மெகா ஏலத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில் மல்லிகா சாகர் செய்த ஒரு தவறால் குஜராத் அணி கூடுதலாக பணத்தை இழந்தது.

ஏலத்தின் முதல் சுற்றில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜாஸ் பட்லர் பெயர் மேடைக்கு வந்தது. அப்போது ஜாஸ் பட்லரை எடுக்க ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் கடுமையாக போராடின. இரு அணிகளும் ஒருவரை ஒருவர் சலிக்காமல் விலை கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை கேட்டு போட்டியிலிருந்து விலகியது.
இதை அடுத்து பஞ்சாப்பும் குஜராத்தும் பட்லரை வாங்க போட்டி போட்டுக் கொண்டன. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணியும் விலக குஜராத்துக்கும் லக்னோவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இந்த சூழலில் 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லக்னோ அணி ஜாஸ் பட்லரை கேட்டது. அப்போது 15 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு லக்னோ கேட்டிருக்கிறார்கள் என்று கூறுவதற்கு பதிலாக மல்லிகா சாகர் 15 கோடியே 50 லட்சம் என்று கூறிவிட்டார்.
இதனால் குஜராத் அணி அடுத்த தொகையாக 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு கேட்டு அவரை ஏலத்திலும் எடுத்துவிட்டது. மல்லிகா சாகர் செய்த தவறால் குஜராத் அணி 25 லட்சம் ரூபாய் கூடுதலாக ஜாஸ் பட்லருக்கு வழங்கி இருக்கிறது. 15 கோடியே 25 லட்சம் ரூபாயை எதிர்த்துக் கேட்கும் போது 17 லட்சத்தி 50 ரூபாய் தான் குஜராத் அணி வாங்கி இருக்க வேண்டும். ஆனால் மல்லிகா சாகர் செய்த தவறால் அவர்கள் கூடுதல் பணத்தை செலவழிக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தவறை பிசிசிஐ பின்னர் திருத்திக் கொள்ளுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.