ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்க நினைத்த ஒரு முக்கிய வீரரை வாங்க விடாமல் செய்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று சிறப்பாக பந்து வீசி வந்தார் வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே.
துஷாரை வாங்குவதில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 2022 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி அவரை அவரது அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு வாங்கி இருந்தது. இந்த நிலையில் 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை அவரது அடிப்படை விலையான ஒரு கோடியில் இருந்து சிஎஸ்கே அணி வாங்க முயன்றது.

ஆனால், துவக்கம் முதல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை வாங்க சிஎஸ்கே அணியுடன் போட்டி போட்டது. வேறு அணிகள் எதுவும் இந்த போட்டிக்கு இடையே வரவில்லை. ஒரு கட்டத்தில் அவரது விலை 6 கோடியை தாண்டியது. சிஎஸ்கே அணி ஆறு 6.25 கோடி என விலை கேட்டது. அப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் விடாப்பிடியாக 6.50 கோடிக்கு விலை கேட்டது.
அத்துடன் சிஎஸ்கே அணி விலகியது. ராஜஸ்தான் ராயல்ஸ் துஷார் தேஷ்பாண்டேவை 6.50 கோடிக்கு வாங்கியது. இதன் பின்னணியில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருப்பதாக கூறப்படுகிறது. சிஎஸ்கே அணி தான் துஷார் தேஷ்பாண்டேவை 2022 இல் அடையாளம் கண்டு அவரை பட்டை தீட்டி ஐபிஎல் தொடரில் பயன்படுத்தி வந்தது.
இந்த நிலையில் மற்ற அணிகள் அவரது முக்கியத்துவத்தை உணராத நிலையில் ராகுல் டிராவிட் அதை சரியாக கணித்து வைத்திருந்தார். அதனால், துஷார் தேஷ்பாண்டேவை எப்படியாவது வாங்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் உறுதியாக இருந்தது. முடிவில் ராகுல் டிராவிட் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றார். சிஎஸ்கே அணிக்கு இது பின்னடைவாக அமைந்தது.