சென்னை: ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நாளை மற்றும் நாளை மறுநாள் சவுதி அரேபியாவின் ஜெடா நகரில் நடக்கவுள்ளது. இதற்காக 10 அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தயாராகி வரும் நிலையில், சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஃபிளம்மிங் இடையிலான உரையாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
அதன் தொடக்கத்தில் ருதுராஜ், நீங்கள் தான் பாஸ்.. நீங்கள் தான் சிஎஸ்கே அணிக்காக வீரர்களை வாங்கப் போகிறீர்கள் என்று சொல்ல, மறுபக்கம் ஃபிளம்மிங், நான் பாஸ் அல்ல.. நீங்களும், தோனியும் பாஸ் என்று பேசினர். இதன்பின் முதல் ஏலத்திற்கும், தற்போதைய ஏலத்திற்கும் இடையிலான வித்தியாசம் குறித்து ருதுராஜ் கெய்க்வாட் கேட்க, அதற்கு ஃபிளம்மிங் பதிலளித்தார்.

அதில், மெகா ஏலத்தை பொறுத்தவரை சில வீரர்களை மீண்டும் வாங்க நினைப்போம்.. சில வீரர்களுடன் எமோஷனல் தொடர்பு இருக்கும்.. ஆனால் ஏலத்தில் அப்படி செயல்பட முடியாது. ஏனென்றால் 10 அணிகளும் அப்படிதான் வருவார்கள். அதேபோல் நான் பங்கேற்ற முதல் சீசனின் போது எங்களால் சீக்ரெட்டை தொடர முடிந்தது. ஆனால் இப்போது திறமையான வீரர்களின் வீடியோக்கள், ஸ்டாட்ஸ் எல்லாம் ஆன்லைனில் வந்துவிடுகிறது.
இம்முறை சில வீரர்களை தங்க வைத்துள்ளோம். இப்போது அவர்களை சுற்றி அணியை கட்டமைக்க வேண்டும். எந்த வீரர்கள் நமது திட்டங்களுக்கு சரி வருவார்கள் என்பதை பார்க்க வேண்டும். நாம் ஒரு சிந்தனையுடன் சென்றால், ராஜஸ்தான் மற்றும் டெல்லி உள்ளிட்ட அணிகளும் அதே திட்டத்துடன் வருவார்கள். அதனால் ஒவ்வொரு திட்டத்திற்கும், ஏராளமான மாற்று திட்டங்களை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நியூசிலாந்து வீரர்களில் எப்படி திறமையான வீரர்களை சரியாக கண்டறிந்து கொண்டு வருகிறீர்கள். ஏனென்றால் கான்வே, சான்ட்னர், ரச்சின் உள்ளிட்டோர் 3 ஆண்டுகளுக்கு முன் யாருக்கும் தெரியாது. இதனை எப்படி சாத்தியப்படுத்த முடிகிறது. அவர்கள் நியூசிலாந்து அணிக்கு சிறப்பாக செயல்படுகிறார்களே என்ற கேள்விக்கு, திறமை மட்டுமே காரணம். அவர்களுடன் சில நேரம் செலவிட முடியும். என்னை பொறுத்தவரை அனைத்து வீரர்களையும் வாங்க வேண்டும் என்பது தான் விருப்பம். ஆனால் போதிய பணம் இருக்காது.
அதேபோல் வீரர்கள் சரியாக அணிக்குள் பொருந்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் அதிர்ஷடமும் ஏலத்தில் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் ஏலத்திற்கு பின் எந்த வீரருக்காவது அதிகம் சென்றிருக்கலாம் என்று தோன்றி இருக்கிறதா என்ற கேள்விக்கு, நிச்சயம் இருக்கும். ஏனென்றால் ஏலத்தை முடித்துவிட்டு மற்ற அணிகளின் செயல்பாடுகளை பார்க்கும் போது, நாம் சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம் என்று தோன்றும்.
ஆனால் நமது அணியை பற்றி மற்றவர்களும் மோசம் என்று நினைக்கூடும். அதனால் ஐபிஎல் தொடரின் வெற்றி ஏலத்தில் மட்டும் முடிவாகவில்லை. ஆனால் ஏலமும் முக்கியம் என்று தெரியும். அதேபோல் மைதானத்தில் களமிறங்கி பயிற்சியை தொடங்கும் போது தான் திறமையான வீரர்கள் முன்னேற்றம் அடைவார்கள். ஆனால் ஒருநாளும் ஏலத்தில் எடுத்த அணியை நினைத்து ஏமாற்றம் அடைந்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.