மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில், ஒரே ஒரு தவறை செய்து விட்டது. ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் ஜெட்டா நகரில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி அடுத்தடுத்து சில நல்ல வீரர்களை வாங்கி குவித்தது. சிஎஸ்கே அணிக்காக ஏற்கனவே விளையாடிய கான்வேவை 6 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கும், ரச்சி ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கும் அஸ்வினை ஒன்பது கோடியே 75 லட்சம் ரூபாய்க்கும் வேகப்பந்துவீச்சாளர் கலில் அகமதை 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கும் சிஎஸ்கே அணி வாங்கியது.

இதேபோன்று அதிரடி வீரர் ராகுல் திருப்பாதியை மூன்று கோடியே 40 லட்சம் ரூபாய்க்கும், ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதை 10 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே ஏலத்தில் தேர்வு செய்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் கடந்த சீசனில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமீர் ரிஸ்வி என்ற வீரர் இடம் பெற்றிருந்தார்.
வலது கை சுரேஷ் ரெய்னா என்று ரசிகர்களால் சமீர் ரிஸ்வி அழைக்கப்பட்டார். அதிரடியாக விளையாடுவதில் வல்லவராக இருக்கும் ரிஸ்வியை, சிஎஸ்கே அணியின் எதிர்கால வீரராக திகழ்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரை சிஎஸ்கே அணி தக்க வைக்கவில்லை. இந்த தருணத்தில் சிஎஸ்கே அணிக்கு இருந்த ஆர் டி எம் கார்டையும் அவர்கள் ரச்சின் ரவிந்தராவுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.
இந்த சூழலில் சமிர் ரிஸ்வி வந்ததும் சிஎஸ்கே அணி ஆர்வமாக ஏலத்தில் எடுத்தது.ஆனால் சிஎஸ்கே அணி 90 லட்சம் ரூபாய் வரை கொடுக்க முன் வந்தது. டெல்லி அணி அவரை 95 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் தமிழக வீரர் விஜய் சங்கரை சிஎஸ்கே அணி போட்டி போட்டு எடுத்து ஒரு கோடி ரூபாய் இருவது லட்சம் கொடுத்து ஏலத்தில் வாங்கியது.
விஜய் சங்கர் அனுபவ வீரராக இருந்தாலும் அவர் பெரிய அளவில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இதனால் விஜய் சங்கருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை சமீர் ரிஸ்விக்கு கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கலாம் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வருகிறார்கள்.