ஜெட்டா: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணியின் முன்னாள் வீரர்களை ஐபிஎல் மெகா ஏலத்தின் இரண்டாவது நாள் அன்று வாங்காமல் புறக்கணித்தது. சிஎஸ்கே அணி எப்போதும் தங்கள் அணியின் வீரர்களுக்கு விசுவாசமாக இருக்கும் எனவும், சிஎஸ்கே வீரர்கள் ஒரே குடும்பம் எனவும் பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு நேர்மாறாக நடந்தது.
2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று இருந்த டேரில் மிட்செல், ஷர்துல் தாக்குர், அஜின்க்யா ரஹானே ஆகியோரை சிஎஸ்கே அணி வாங்கவில்லை. அதேபோல ஃபாப் டூ பிளசிஸ் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் அவரை சிஎஸ்கே அணி வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 2018 முதல் 2021 வரை சிஎஸ்கே அணியில் இடம் பெற்று ஆடி இருந்தார்.

அவரையும் சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கவில்லை. டூ பிளசிஸ்-இன் அடிப்படை விலையான 2 கோடிக்கு வாங்கியது. சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணி ஏலத்தில் தங்கள் அணியின் முன்னாள் வீரர்கள் குறைந்த விலைக்கு கிடைத்தால் நிச்சயமாக வாங்கிவிடும். ஆனால், டேரில் மிட்செல், அஜின்க்யா ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோரை வாங்க ஆள் இல்லாத நிலையிலும் சிஎஸ்கே அணி அவர்களை வாங்க மறுத்தது.
சிஎஸ்கே அணியிடம் தங்கள் அணியின் முன்னாள் வீரர்களை வாங்க ஆர்டிஎம் அட்டையும் இருந்தது. ஆனாலும், சிஎஸ்கே அவர்களை வாங்க முன்வரவில்லை. அஸ்வினை 9.75 கோடிக்கு வாங்கிய சிஎஸ்கே அணி, பல நல்ல வீரர்களை இரண்டாம் நாள் ஏலத்தில் தவறவிட்டது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
வேகப் பந்துவீச்சாளர்களை வாங்குவதில் துவக்கம் முதலே சிஎஸ்கே அணி அதிக கவனம் செலுத்தியது. இந்த நிலையில் ஷர்துல் தாக்குரை சிஎஸ்கே வாங்கவில்லை. தீபக் சாஹர் அதிக விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். அதனால், சிஎஸ்கே அணி அவரையும் தவறவிட்டது. எனினும், சிஎஸ்கே அணி தங்கள் அணியில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்று இருந்த இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் கர்ரனை 2.40 கோடிக்கு வாங்கியது. இது நல்ல தேர்வாக இருந்தது.