ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டனை வாங்குவதில் இரண்டு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வீரர்களை சுமார் 65 கோடி ரூபாய்க்கு தக்க வைத்தது. அதனால் ஒட்டுமொத்தமாக வீரர்கள் சம்பளத்திற்கான 120 கோடி ரூபாய் தொகையில் 65 கோடி போக மீதம் 55 கோடி மட்டுமே சிஎஸ்கே கையிருப்பில் இருந்தது.

மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 83 கோடி கையிருப்பு இருந்தது. குறைவான தொகை மட்டுமே கையில் இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் முக்கிய வீரர்களை வாங்க முடியாமல் தவித்தது. இந்த நிலையில், இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டன் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டது.
லியாம் லிவிங்ஸ்டன் ஒரு ஆல் ரவுண்டர் ஆவார். அதிரடியாக பேட்டிங் செய்யும் ஆற்றல் உள்ள இவர் ஆஃப் ஸ்பின் மற்றும் லெக் ஸ்பின் வீசக் கூடியவர். இவரது பெயர் அறிவிக்கப்பட்ட உடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இவரை வாங்க போட்டி போட்டன.
பின்னர் சன்ரைசர்ஸ் அணி விலகியது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் அவரை வாங்க போட்டி போட்டது. ஏலத் தொகை 7 கோடி ரூபாயை எட்டிய நிலையில் டெல்லி அணி விலகியது. ஆர்சிபி அணி அவரை வாங்கி விடலாம் என மகிழ்ச்சியில் இருந்த போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களத்தில் குதித்தது.
அதன் பின் ஆர்சிபி அணியுடன் சிஎஸ்கே அணி மோதியது. இரண்டு அணிகளும் மாற்றி, மாற்றி விலையை உயர்த்தின. இறுதியில் ஆர்சிபி அணி 8.75 கோடி ரூபாய்க்கு லியாம் லிவிங்ஸ்டனை வாங்கியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 55 கோடி ரூபாய் மட்டுமே கையிருப்பில் இருந்ததால் அதற்கு மேல் விலை கேட்க முடியாமல் பின்வாங்கியது.
முக்கிய வீரர்கள் இடம் பெற்ற முதல் இரண்டு சுற்றுகளில் ஆர்சிபி அணி லியாம் லிவிங்ஸ்டனை மட்டுமே வாங்கியது. இந்த இரண்டு சுற்றுகளில் சிஎஸ்கே அணி ஒருவரைக் கூட வாங்கவில்லை.