அபுதாபி: ஐபிஎல் 2026 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி நிர்வாகம், 19 வயதே ஆன இளம் வீரர் கார்த்திக் சர்மாவை ரூ.14.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்து அனைவரையும் மிரள வைத்தது. தோனியின் தீவிர ரசிகரான கார்த்திக், தன்னை இவ்வளவு பெரிய தொகைக்கு சிஎஸ்கே வாங்கியதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரருக்கு இவ்வளவு பெரிய தொகையா? என்று கிரிக்கெட் உலகம் வியக்கும் வேளையில், அந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்று உருகியுள்ளார் கார்த்திக் சர்மா.

ராஜஸ்தானைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கார்த்திக் சர்மா, ஏலத்தை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கான ஏலம் தொடங்கிய விதம் குறித்தும், அது முடிந்த பிறகு தனது மனநிலை குறித்தும் அவர் உருக்கமாகப் பேசியுள்ளார்.
"நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஆனால் அந்தத் தருணத்தில் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. ஏலம் தொடங்கியபோது, 'இன்று என்னை யாரும் எடுக்க மாட்டார்களோ?' என்று பயந்தேன். ஆனால் ஏலம் சூடுபிடித்துத் தொகை எகிறத் தொடங்கியதும், என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது.
ஏலம் முடிந்த பிறகும் நான் அழுதுகொண்டே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் நடனமாடினார்கள். ஆனால் நானோ அழுதுகொண்டிருந்தேன். அந்த அளவுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். என் உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை" என்று கார்த்திக் உணர்ச்சிவசப்பட்டார்.
கார்த்திக் சர்மாவை வாங்க ஆரம்பத்தில் லக்னோ மற்றும் மும்பை அணிகள் ஆர்வம் காட்டின. பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தீவிரமாகப் களமிறங்கியது. கொல்கத்தா அவரை வாங்கிவிடும் என்று நினைத்த நேரத்தில், சிஎஸ்கே உள்ளே புகுந்து விலையை எகிற வைத்தது.
10 கோடியைத் தாண்டியதும் ஹைதராபாத் (SRH) அணி போட்டிக்கு வந்தது. ஆனால், விடாப்பிடியாக நின்ற சிஎஸ்கே, இறுதியில் ரூ.14.2 கோடிக்கு கார்த்திக் சர்மாவைத் தட்டித் தூக்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்கேப்ட் வீரர் (பிரசாந்த் வீர் உடன் இணைந்து) என்ற சாதனையை இவர் படைத்தார்.
சிஎஸ்கே அணியில் இணைந்தது குறித்துப் பேசிய கார்த்திக், "முதல்முறையாக நான் மஹி பாய் (தோனி) உடன் விளையாடப் போகிறேன். அவரிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளலாம் என்பதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முதன்முறையாக ஏலத்தில் எடுக்கப்பட்டதே இவ்வளவு பெரிய தொகைக்கு என்பது நம்பமுடியாத ஒன்று" என்றார்.
கார்த்திக் சர்மா நான்காவது இடத்தில் களமிறங்கி அதிரடியாக ஆடும் திறன் கொண்டவர் என்பதால், சிஎஸ்கே இவர் மீது இவ்வளவு பெரிய முதலீட்டைச் செய்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபி: கடந்த சீசனில் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் (445 ரன்கள்) குவித்தவர். ஸ்ட்ரைக் ரேட் 118.03.
சையத் முஷ்டாக் அலி: 11 இன்னிங்ஸ்களில் 334 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 162.92.
ஷேர்-இ-பஞ்சாப் டி20: 10 இன்னிங்ஸ்களில் 457 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 168.01.