மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு தொடருக்கான மெகா ஏலம் எப்போது நடைபெறும் என்பதுதான் தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதி பத்து அணிகளும் தாங்கள் எந்தெந்த வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிவித்திருக்கிறது.
அதன்படி மொத்தமாக 10 அணிகளும் சேர்த்து 46 வீரர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக பத்து அணிகளும் 558 கோடியே 50 லட்சம் ரூபாய் பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். இந்த 46 வீரர்களில் 10 இந்திய வீரர்கள் அண்கேப்டு வீரராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பல அணிகள் பல நட்சத்திர வீரர்களை விடுவித்து இருக்கிறது. இதன் மூலம் ஜாஸ் பட்லர், மேக்ஸ்வெல், ஏய்டன் மார்க்கரம், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், டுபிளசிஸ் போன்ற வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். இதனால் பல வீரர்கள் பல அணிகளுக்கு மாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது.
அது மட்டுமல்லாமல் ரிஷப் பண்ட், டுபிளசிஸ், சாம் கரண் போன்ற ஐந்து கேப்டன்கள் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்த ஐந்து அணிகளுமே புதிய கேப்டனை தேடும் சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் நகரில் நடத்தப்பட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாக போகிறது. இன்னும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு 20 நாட்கள் மட்டுமே இருப்பதால், எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை வாங்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறது. தீபாவளி விடுமுறையை முடித்துவிட்டு தற்போது ஒவ்வொரு அணிகளும் மாதிரி ஏலம் நடத்தி எந்த வீரர்களை எப்படி வாங்க வேண்டும்.
ஏலத்தில் எந்த யுக்தியை பயன்படுத்த வேண்டும் என்ற ஃபார்முலாவை வகுத்து வருகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை தோனிக்கு பிறகு அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்பதை இந்த ஏலத்திலே முடிவு செய்ய தீவிரம் காட்டி வருகிறது. மெகா ஏலத்திற்கு முன்பு எந்தெந்த வீரர்கள் தங்களுடைய பெயரை ஏலத்திற்கு பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களுடைய அடிப்படை விலை என்ன என்பதை பிசிசிஐ வரும் நாட்களில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.