மும்பை : ஐபிஎல் மெகா ஏலத்தில் யாருமே எதிர்பாராத வகையில் கேஎல் ராகுலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுக்க முற்பட்டது, ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணியின் ஸ்டார் வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர், பண்ட் ஆகியோர் எல்லாம் 25 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனார்கள்.
இந்த சூழலில் கேஎல் ராகுலும் 20 கோடி ரூபாயை தாண்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கே எல் ராகுல் கடந்த சில காலமாக மெதுவாக விளையாடி வருகிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் அவர் இந்திய டி20 அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

டி20 உலக கோப்பையில் கூட கேஎல் ராகுல் சேர்க்கப்படவில்லை. இதனால் ராகுலின் மவுஸ் கொஞ்சம் குறைந்து இருக்கிறது. ராகுலின் பெயர் வந்ததும் அவரை ஏலத்தில் எடுக்க முதலில் அணிகள் தயக்கம் காட்டியது. எனினும் கொல்கத்தா அணி அவரை இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்டது.
இதன் பிறகு கொல்கத்தா ஆணியும் ஆர்சிபி அணியும் கேஎல் ராகுலை வாங்க கடுமையாக போராடியது. ராகுல் ஏற்கனவே ஆர்சிபி அணிக்காக விளையாடியவர் என்பதால் அவருக்கு பெரிய தொகை கொடுக்க ஆர்சிபி முன் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொல்கத்தாவுடன் நடந்த மோதலில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் வரை rcb அணி ராகுலுக்கு கொடுக்க முன் வந்தது.
ஆனால் கொல்கத்தா அணி மீண்டும் பெரிய தொகைக்கு ராகுலை கேட்டதால் ஆர்சிபி அணி போட்டியிலிருந்து விலகியது. இதை அடுத்து ராகுலை வாங்க டெல்லியும் கொல்கத்தாவும் முயற்சி செய்து வந்தன. திடீரென்று யாருமே எதிர்பாராத வகையில் சிஎஸ்கே அணி போட்டிக்குள் குதித்தது. சிஎஸ்கே அணி ராகுலை 12 கோடியே 25 லட்சம் ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுக்க முற்பட்டது.
ஆனால் குறுக்கே இந்த கௌசிக் வந்தால் என்பது போல் டெல்லி அணி ஏலப்பணத்தை அதிகரித்தது. இதை அடுத்து சிஎஸ்கேவும் டெல்லியும் போட்டி போட்டு ராகுலை கேட்டன. ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி 13 கோடியே 75 லட்சம் ரூபாய் வரை கேட்டது. ஆனால் டெல்லி அணி 14 கோடி ரூபாய் தருவதாக கூறியதை எடுத்து சிஎஸ்கே அணி போட்டியிலிருந்து விலகியது. இதனை அடுத்து டெல்லி அணி 14 கோடி ரூபாய்க்கு ராகுலை வாங்கியது. லக்னோ அணியிடம் ஆர்டிஎம் கார்டு வசதி இருந்தும், அவர்கள் ராகுலை வாங்க முன்வரவில்லை. இதனால் ராகுல் தற்போது டெல்லி அணிக்காக விளையாட போகிறார்.