மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளால் போட்டி போட்டு வாங்கப்பட்ட உத்தர பிரதேச வீரர் விப்ராஜ் நிகாம், 2024 சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் திடீர் ஆல் ரவுண்டராக மாறி தனது அணிக்கு தனி ஆளாக வெற்றியை தேடித் தந்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை ஐபிஎல் ஏலத்தில் 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கி இருந்தது. எதற்காக அவரது அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் அதிக விலை கொடுக்க தயாராகி போட்டி போட்டன என்ற சந்தேகம் அப்போது பலருக்கும் இருந்தது.

அதற்கு விடை கொடுக்கும் வகையில் விப்ராஜ் நிகாம் சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் எட்டாம் வரிசையில் பேட்டிங் இறங்கி 8 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார். ஆந்திரா அணிக்கு எதிரான கால் இறுதிப் போட்டியில் உத்தர பிரதேச அணி விளையாடியது.
இந்த போட்டியில் ஆந்திரா அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. உத்தர பிரதேச அணியில் புவனேஸ்வர் குமார், மொஹ்சின் கான் போன்ற முன்னணி வேகப் பந்துவீச்சாளர்கள் இருந்த நிலையில் சுழற் பந்துவீச்சாளரான விப்ராஜ் நிகாம் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து உத்தர பிரதேச அணி சேஸிங் செய்தது. அந்த அணிக்கு துவக்க வீரர் கரன் சர்மா அதிரடி துவக்கம் அளித்தார். அவர் 31 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். ரிங்கு சிங் 22 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.
அவருடன் இணைந்த விப்ராஜ் நிகாம் அதிரடியாக ரன் சேர்த்தார். அவர் வெறும் 8 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். மூன்று ஃபோர் மற்றும் இரண்டு சிக்ஸ் அடித்து இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 337.50 ஆக இருந்தது. உத்தர பிரதேச அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருந்த நிலையில், விப்ராஜ் நிகாம் தனது அதிரடி பேட்டிங்கால் போட்டியின் முடிவை மாற்றினார்.
உத்தர பிரதேச அணி 19 வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. நான்கு விக்கெட் வித்தியாசத்தில் ஆந்திர பிரதேச அணியை வீழ்த்தியது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் ஆல் - ரவுண்டராக ஜொலித்த விப்ராஜ் நிகாம் ஆட்டநாயகன் விருதை வென்றார்.