மும்பை : ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனுக்கான ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது முடிவடைந்து இருக்கிறது. 10 அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு வீரர்களை வாங்கியிருக்கிறார்கள்.
மொத்தமாக 10 அணிகளும் இணைந்து 72 வீரர்களை வாங்கியிருக்கிறது. இதில் 24 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் சிஎஸ்கே, பஞ்சாப் போன்ற அணிகள் 4 rtm கார்டை பயன்படுத்தி இருக்கிறது. முதல் நாள் மெகா ஏலத்தில் 467 கோடியே 95 லட்சம் ரூபாய் மொத்தமாக செலவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக ரிஷப் பன்ட் 27 கோடி ரூபாய்க்கு ஏலம் போகியிருக்கிறார். அவர் லக்னோ அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஸ் ஐயரை 26 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இந்த மெகா ஏலத்தில் மிக முக்கிய நிகழ்வாக தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பிருக்கிறார்.
இதேபோன்று 30 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட நமன் திர் 4 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணையால் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அப்துல் சமத் தற்போது லக்னோ அணியால் 4 கோடியே 80 லட்சம் ரூபாய்க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கடந்த ஏலத்தில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன சிஎஸ்கே வீரர் சமீர் ரிஸ்வி தற்போது வெறும் 95 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணிக்கு ஏலம் சென்றுள்ளார்.
இதேபோன்று சிஎஸ்கே அணியில் மற்றொரு சிறப்பான நடவடிக்கையாக ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதை 10 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் சிஎஸ்கே எடுத்தது. எனினும் மற்றொரு முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான மகிஷ் தீக்சனாவை சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுக்கவில்லை.
இதனால் அவரை ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. மற்றொரு இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளரான ஹசரங்கா ராஜஸ்தான் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வீரர்களை அதிகபட்சமாக இங்கிலாந்து சேர்ந்த ஜாஸ் பட்லர் 15 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணியால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.