ஜெட்டா: 2025 ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரராக அறியப்பட்ட இஷான் கிஷனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியது. இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் வலுவானதாக மாறி உள்ளது. ரசிகர்கள் இது குறித்து சமூக வலை தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
2016 ஐபிஎல் தொடரில் தான் இஷான் கிஷன் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் பங்கேற்றார். அப்போது குஜராத் லயன்ஸ் அணியில் அவர் இடம் பெற்று இருந்தார். அதன் பின் 2018 முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று இருந்தார். ஆறு ஆண்டுகளாக அந்த அணியில் இருந்த அவர் 2024 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதன் பின் அவர் ஏலத்தில் பங்கேற்றார். ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் அவரை வாங்க முயன்றது. ஆனால் அவருக்கான தொகை 3.40 கோடியை எட்டிய போது மும்பை இந்தியன்ஸ் அணி அவரை கைவிட்டது. அதன் பின் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அவரை வாங்க முட்டி மோதின.
10 கோடியை தாண்டியவுடன் களத்தில் குதித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 11.25 கோடி ரூபாய்க்கு வாங்கியது. இஷான் கிஷன் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் குறைந்த தொகைக்கு அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வாங்கியது லாபகரமானதாக பார்க்கப்படுகிறது.
இஷான் கிஷன் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏற்கனவே அதிரடி வீரர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ஹென்ரிச் கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருடன் இஷான் கிஷனும் இணைந்து இருக்கிறார். இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பலமானதாக மாறி உள்ளது.